தங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை
டெல்லி: தங்கத்தை விட தண்ணீர் சென்னையில் அதிக விலைக்கு விற்கிறது என்று ராஜ்யசபாவில் எம்.பி. டி.கே.ரங்கராஜன் கருத்து தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் இன்று உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன், இந்தியாவிலேயே, சுத்தமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் முதல் நகரம் சென்னைதான். சென்னையில் தண்ணீரை விட தங்கம் மலிவானது. ஐ.டி துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன, ஏனென்றால் நகரத்தின் ஊடாக ஓடும் மூன்று ஆறுகளும் சாக்கடை கால்வாய்களாக மாற்றப்பட்டுவிட்டன.
சென்னை ஒரு காஸ்மோபாலிட்டன் நகரமாக இருப்பதால், சென்னையை விரைந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களுக்கு உள்ளதாக நான் நினைக்கிறேன். இவ்வாறு ரங்கராஜன் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி ராஜா பேசுகையில், மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறுகள் தீர்க்கப்பட வேண்டும். சென்னை மற்றும் பல நகரங்களில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். தமிழகத்தில் அமைதியின்மை நிலவுகிறது.
மழைநீர் சேகரிப்பு திட்டம் இருந்தபோதிலும், சென்னை கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. தமிழ்நாட்டில் நதி நீர் பிரச்சினை பெரிய அளவில் உள்ளது. ஏனென்றால் ஒரு நதியைத் தவிர மற்ற அனைத்தும் மற்ற மாநிலங்களிடமிருந்து வர வேண்டிய நதிநீராக உள்ளது என்றார்.