ஷேக் அப்துல்லா, கோபாலசுவாமி அய்யங்கார், வல்லபாய் படேல்.. 370வது பிரிவு உருவானது இப்படித்தான்!
Recommended Video
டெல்லி: இந்திய வரலாற்றின் பக்கங்கள் இடம்பிடித்திருந்த ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 370-வது பிரிவு உருவானதில் ஜம்மு காஷ்மீரின் முதுபெரும் தலைவர் ஷேக் அப்துல்லா, முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் மற்றும் காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங்கின் திவானாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்தா கோபாலசுவாமி அய்யங்கார் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
பாகிஸ்தான் படையெடுப்பில் இருந்து தப்பிக்க இந்தியாவுடன் இணைய மஹாராஜா ஹரிசிங் ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் களமிறங்கி பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்தது.
இதன்பின்னர் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1949-ம் ஆண்டு ஜூலை மாதம் மஹாராஜா ஹரிசிங்கால் ஜம்மு காஷ்மீர் பிரதிநிதிகளாக ஷேக் அப்துல்லா உள்ளிட்ட மூவர் அரசியல் சாசன சபைக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது நேரு அமைச்சரவையில் இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக இருந்தவர் தமிழரான கோபாலசுவாமி அய்யங்கார். ஷேக் அப்துல்லா உள்ளிட்ட மூவர் குழுவுடன் கோபாலசுவாமி அய்யங்கார் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தி 370-வது பிரிவை உருவாக்கினார்.
தமிழரான கோபாலசுவாமி அய்யங்கார்
தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் கோபாலசுவாமி அய்யங்கார். 1905-ம் ஆண்டு மெட்ராஸ் சிவில் சர்வீஸில் இணைந்தார். 1919-ம் ஆண்டு வரை துணை ஆட்சியராக பணிபுரிந்தார். பின்னர் பல்வேறு அரசு பணிகளில் நியமிக்கப்பட்டார். 1937-ம் ஆண்டு முதல் 1943-ம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரின் பிரதமராக இருந்தார். 1947-48-ம் ஆண்டு நேருவின் அமைச்சரவையில் இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக பணியாற்றினார். 1948-52-ல் ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 1952-53-ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் கோபாலசுவாமி அய்யங்கார் பதவி வகித்தார். ஐநாவில் காஷ்மீர் விவகாரம் எழுப்பப்பட்ட போது இந்திய பிரதிநிதிகள் குழுவின் தலைவராகவும் இருந்தார் கோபாலசுவாமி அய்யங்கார்.
அம்பேத்கர் மறுப்பு என்பதால்..
நாட்டின் முதலாவது சட்ட அமைச்சரான அம்பேத்கருடன்தான் முதலில் 370-வது பிரிவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஷேக் அப்துல்லாவிடம் நேரு கூறினார். ஆனால் அம்பேத்கர் மறுத்ததால் கோபாலசுவாமி அய்யங்காரை நேரு நியமித்தார் என்கிறது வரலாறு.
பட்டேல் இல்லத்தில் பேச்சுவார்த்தை
முன்னதாக 1949-ம் ஆண்டு மே 15-16 தேதிகளில் சர்தார் வல்லபாய் பட்டேல் இல்லத்தில் பிரதமர் நேரு முன்னிலையில் முதலாம் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அப்போதுதான் 370வது வரைவை நேரு சார்பாக ஷேக் அப்துல்லாவிடம் கோபாலசுவாமி அய்யங்கார் கொடுத்தார். மேலும், வல்லபாய் பட்டேலுக்கு அனுப்பிய குறிப்பில் உங்களுடைய ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஷேக் அப்துல்லாவுக்கு இந்த வரைவை நேரு அனுப்பி வைப்பார் எனவும் எழுதியிருந்தார் கோபாலசுவாமி அய்யங்கார்.
காஷ்மீர் மக்களின் விருப்பம்
1949-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அரசியல் சாசன சபையில் 370-வது பிரிவு குறித்து பேசிய கோபாலசுவாமி அய்யங்கார், ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அரசியல் சாசன சபை மூலம் ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசனத்தை நிர்ணயிப்போம். அதில் மத்திய அரசின் வரம்பு எல்லைகளும் இடம்பெறும். இந்த 370-வது பிரிவு வரைவில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது என விவரித்தார். பின்னர் ஷேக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக 370-வது பிரிவில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டினார். இதை பட்டேல் அப்போது ரசிக்கவில்லை.
ஷேக் அப்துல்லாவின் ராஜினாமா மிரட்டல்
நேரு வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தார். அதனால் கோபாலசுவாமி அய்யங்காரை அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த பணிகளை மேற்கொள்ள பட்டேல் உத்தரவிட்டதுடன் நேருவுக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பினார். 1949-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதியிட்ட அக்கடிதத்தில், மிகப் பெரிய விவாதங்களுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் ஒப்புதலுக்கு இது அனுப்புவதாக குறிப்பிட்டிருந்தார். அதே காலகட்டத்தில் அரசியல் சாசன சபையில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக ஷேக் அப்துல்லா மிரட்டலும் விடுத்துக் கொண்டிருந்தார்.
அன்றே சர்ச்சை
1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ஹரி விஷ்ணு காமத் எம்.பி, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறவில்லை என்பதை குறிப்பிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் சொத்துகளை வாங்க முடியாத நிலை உள்ளது. அஸ்ஸாமின் மலைமாவட்டங்களிலும் இத்தகைய நிலைமை உள்ளது என சுட்டிக்காட்டினார். மஹாராஜா ஹரிசிங்கின் மகனான முன்னாள் எம்.பி. கரண்சிங் An Examined Life என்ற புத்தகத்தில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் என வலதுசாரிகள் விரும்புக்ன்றனர். இது எனக்கு எப்போதும் ஆச்சரியம்தரக் கூடியதுதான்.
உணர்வுகளுக்கு மதிப்பு தேவை
இந்தியா மிகப் பெரும் நாடு. மிகப் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் நாம். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் கீழ் வந்தது ஒரு சிக்கலான சூழலில்தான். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் சிறப்பு அந்தஸ்து தேவையா என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இந்தியா மதரீதியாக பிளவுபட்ட போதும் முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்ட ஜம்மு காஷ்மீரானது இந்தியாவுடன் தான் இணைந்திருக்கிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பதிவு செய்திருப்பார் கரண்சிங். இப்போதும் அந்த வரிகள் பொருந்தும்!