தீவிரவாத எதிர்ப்பில் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
டெல்லி:டெல்லியில் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்... புல்வாமா தாக்குதலில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 2 தமிழக வீரர்களும் அடங்குவர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தீவிரவாத ஒழிப்புக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.
இந் நிலையில், காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது. உள்துறை அமைச்சகம் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
நாடாளுமன்ற நூலக அரங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் தொடங்கி உள்ளது. குலாம் நபி ஆசாத்(காங்), ஆனந்த் சர்மா (காங்), சரத்பவார்(தேசியவாத காங்கிரஸ்),திமுக சார்பில் கனிமொழி மற்றும் எம்பி டி. ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்தும் அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் மத்திய அரசு பெற்றுக் கொண்டது.
புல்வாமா தாக்குதல் குறித்து அரசு மேற்கொண்டிருக்கிற நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன.