இந்திய ராணுவத்திற்கு ஒரே தலைமை தளபதி.. மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு
டெல்லி: முப்படைகளையும், ஒருங்கிணைக்க ஒரே தலைமை தளபதி பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர், பிரகாஷ் ஜவடேக்கர் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாதுகாப்பு தலைமைத் தலைவர் பதவியை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவராக நியமிக்கப்படவுள்ள அதிகாரி, நான்கு நட்சத்திர ஜெனரலாக இருப்பார். மேலும் ராணுவ விவகாரத் துறையின் தலைவராகவும் இருப்பார் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அரசு வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி சில தகவல்களை வெளியிட்டுள்ளது:
ராணுவ விவகாரங்களை நிர்வகிக்க தகுந்த நிபுணத்துவம் கொண்ட ராணுவ விவகாரத் துறையின் கீழ் ஆயுதப்படைகள் வரும். பாதுகாப்புத் தலைமைத் தலைவர் அதற்கு தலைமை தாங்குவார். ராணுவ விவகாரத் துறை பொதுமக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் பொருத்தமான கலவையுடன் இருக்கும். பாதுகாப்புத் தளபதி, முப்படை தளபதிகள் உட்பட எந்தவொரு ராணுவக் கட்டளையையும் செயல்படுத்த மாட்டார்.
முப்படை, விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக பாதுகாப்புப் தலைமை தளபதி செயல்படுவார். மற்றபடி, முப்படை தலைவர்களும் அந்தந்த சேவைகள் தொடர்பான பிரத்தியேக விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள். இவ்வாறு அந்த செய்தி தெரிவிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிலும், இதுபோன்ற பதவியிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இந்த ஆண்டு, தனது சுதந்திர தின உரையின் போது இந்த நிலைப்பாட்டை அறிவித்தார். "நமது படைகள் இந்தியாவின் பெருமை. படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் அதிகப்படுத்த, நான் செங்கோட்டையில் இருந்து ஒரு முக்கிய முடிவை அறிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் பாதுகாப்புத் தளபதி இருக்கப்போகிறார். இது படைகளை இன்னும் திறம்பட மேம்படுத்தப் போகிறது," என்று மோடி அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் பாதுகாப்பு அமைச்சராக இருந்து மறைந்த மனோகர் பாரிக்கர் இந்த பதவி இடத்தை வலுவாக ஆதரித்து வந்தவர்களில் ஒருவர்.