தொழிலாளர்கள் சுரண்டல்...நண்பர்கள் வளர்ப்பு...இதுதான் மோடிஜியின் ஆட்சி...ராகுல் ட்வீட்!!
டெல்லி: ''விவசாயிகளை அடுத்து தொழிலாளர்களையும் சுரண்டி நண்பர்களை வளர்த்து வருகின்றனர். இதுதான் மோடிஜியின் ஆட்சியாக இருந்து வருகிறது'' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஞ்சாப், அரியானா, டெல்லி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாயில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனார். இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை இந்தப் போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளனர். காங்கிரசும் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண் மசோதாவுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்பு 100 தொழிலாளர்கள் இருந்தால், அரசின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கலாம் என்று இருந்தது. ஆனால், தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவில் தற்போது 300 தொழிலாளர்கள் இருந்தால் அரசின் அனுமதியைப் பெறாமல் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி தனது ட்விட்டரில், ''விவசாயிகளுக்குப் பின்னர் நாட்டில் தொழிலாளர்களை மோடி அரசு குறிவைத்துள்ளது. தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர். நண்பர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர். இதுதான் மோடி அரசு'' என்று பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி தனது பதிவில், ''இந்த மாதிரியான நேரங்களில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், அரசு கொண்டு வந்து இருக்கும் சட்டத்தைப் பாருங்கள். எளிதாக ஒருவரை பணியில் இருந்து நீக்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இந்த அரசு அட்டுழியங்களை செய்து வருகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த புதன் கிழமை ராஜ்ய சபாவில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தது.
மாறி இருக்கும் தொழில் சூழலில் இந்த சட்ட திருத்தங்கள் உதவியாக இருக்கும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கேங்க்வார் தெரிவித்து இருந்தார். வேளாண் மசோதாவைப் போன்றே இந்த மசோதாவுக்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.