லாக்டவுனை ஏப்.14க்கு பிறகும் நீட்டிக்க பிரதமர் மோடி விரும்புவதாக தகவல்.. 11ம் தேதி முக்கிய அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ந் தேதி முடிவு எடுக்க உள்ளது. சனிக்கிழமை அன்று வீடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனைக்கு பின்னர் கொரோனா வைரஸ் தடுப்புக்கான லாக்டவுனை நீட்டிப்பது குறித்து இறுதி முடிவை எடுக்க உள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 5194 மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரானாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்காளம் என நாட்டின் பல மாநிலங்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
கேரளா: மே இறுதி வரை விமான போக்குவரத்து இல்லை- தேர்வுகளுக்காக மட்டும் பள்ளிகளை திறக்க பரிந்துரை
அதிக சோதனை
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனில் ஏராளமானோருக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டியது மிக அவசியம் ஆகும். அத்துடன் சமூக விலகலை கடைபிடிக்க வைக்க வேண்டியதும் அவசியம் ஆகும். தற்போதைய சூழலில் கொரோனா தொற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதியுடன் ஒப்பிடும் போது மிக கடுமையாக பரவி உள்ளது. இன்னும் வேகமாக பரவி வருகிறது.
ஊரடங்கை நீடிக்க ஆதரவு
எனவே தெலுங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்கள் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல் மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள் என பலரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்றும் ஊரடங்கை நீட்டிக்காமல் விட்டால் பெரும் அபாயத்திற்கு வழிவகுக்கும் என்றும் இதுவரை போராடிய முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
கடுமையான பாதிப்பு
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் மத்திய அரசு, ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது பற்றி ஆலோசித்து வருகிறது. பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எப்படி சமாளிப்பது என்று மத்திய அரசு யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி அறிவிப்பார்
இந்த சூழலில் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ந் தேதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 11ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ முறையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது லாக்டவுன் விஷயத்தில் முதல்வர்களின் கருத்துக்களை கேட்கும் அவர் அன்றே லாக்டவுன் நீடிக்கப்படுமா எனப்தை தெளிவுப்படுத்த உள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லாக்டவுன் நீடிக்க விருப்பம்
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடந்தது.. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அரசியல் கட்சி தலைவர்களிடம், லாக்டவுன் ஏப்ரல் 14ம் தேதியுடன் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் விலக்கப்படாது என்று தெரிவித்தாக பிஜேடி கட்சியின் மூத்த தலைவர் பினாக்கி மிஸ்ரா தெரிவித்தார்.