3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு... வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி சேவை முடங்கும் அபாயம்
Recommended Video
டெல்லி: 3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்கக் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து, ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்பை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் நாடு முழுவதும் 85 ஆயிரம் வங்கி கிளைகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 6 நாட்களாகவே அடுத்தடுத்து வங்கிப் பணிகள் முடங்கிய நிலையில், இன்றைய வேலைநிறுத்தத்தால், வங்கிச் சேவை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், காசோலை பரிவர்த்தனைகள் முடங்கும் என்றும், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர்
இதைப்போல மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து தேசிய தொழிற்சங்க மாநாடு சார்பில் ஜனவரி மாதம் 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திலும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.