தடுப்பூசி போட மத்திய அரசு கேட்ட பட்டியல்.. தேர்தல் ஆணையம் சம்மதம்.. செம்ம திருப்பம்
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல்கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு போடப்பட உள்ளது. அவர்களை அடையாளம் காண்பதற்காக வாக்காளர் பட்டியலைப் பகிர்ந்து கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் விடுத்த வேண்டுகோளை தேர்தல் ஆணையம் (இ.சி) ஏற்று கொண்டுள்ளது. இந்த தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போத தேர்தல் ஆணையம், உள்தறை அமைச்சகத்திற்குத் தேவையான குறிப்பிட்ட தரவுகளை பிரித்து தருவதற்கான பணிகளை செய்ய தொடங்கி உள்ளது.
மத்திய அரசின் திட்டப்படி, தடுப்பூசி முதலில் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும், அதன்பிறகு 50 வயதிற்குட்பட்ட தொற்றா நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு வழங்கப்படும். தற்போது முதல்கட்டமாக 50 க்கு மேல் மற்றும் 60 க்கு மேல் உள்ளவர்கள் என பட்டியல் உருவாக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட உள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறிய தகவலின் படி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் காண தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தரவு கோரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதன்படி வழங்க உள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், " 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் சாவடி வாரியான தகவல்களை அந்தந்த மாநிலங்களுக்கு நாங்கள் வழங்குவது குறித்து பரிசீலிப்போம். எல்லா மாநிலங்களின் தகவல்களையும் ஒற்றை மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு பதிலாக அந்தந்த மாநிலங்களுக்கு வழங்குவோம் என்றார்
கடந்த மாதம் சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள் இடையே நடந்த சந்திப்பிற்கு பின்னர் உள்துறை செயலாளர் அஜய் பல்லாவிற்கு, 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்களை பகிர ஒப்புதல் தெரிவித்து தேர்தல் ஆணையம் பதிலை அனுப்பி உள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை உறுதி செய்வதற்கும் அனைத்து மாநில அரசாங்கங்களுடனும் ஒருங்கிணைக்கும் நோடல் அமைப்பு என்றால் அது உள்துறை அமைச்சகம் தான். கடந்த மாதம், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தடுப்பூசி வழங்குவதற்கு உதவி கோரினால் நிச்சயம் தேர்தல் ஆணையம் உதவும் என்று கூறியிருந்தார்.