முத்ரா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்கியவர்கள்.. 5-ல் ஒருவர் மட்டுமே.. அரசின் பரபரப்பு சர்வே
Recommended Video
டெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்று புதிய தொழிலை தொடங்கியவர்கள் 5 பேரில் ஒருவர் மட்டுமே என்றும் மற்றவர்கள் தாங்கள் ஏற்கெனவே உள்ள தொழிலை விஸ்தரிக்கவே கடன் பெற்றுள்ளனர் என்ற பரபரப்பு தகவல்கள் அரசு மேற்கொண்ட சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் முத்ரா என்ற திட்டம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவர்களின் தொழில் மேம்பாட்டிற்கு ரூ 10 லட்சம் வரை கடன் வழங்கும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் முத்ரா வங்கியில் சிறு, குறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிகக் கடைகள், பழம், காய்கறி விற்பனையாளர்கள் உள்ளிட்ட தொழில் முனைவோர் நிதியுதவி பெறலாம். வேலையின்மையை போக்குவதற்காகவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
முத்ரா திட்டம்
இந்த நிலையில் தொழிலாளர் நலத் துறை மூலம் முத்ரா திட்டத்தில் பயன்பெறுவோர் குறித்த சர்வே எடுக்கப்பட்டது. ஏப்ரல் 2015-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2017-ஆம் ஆண்டு வரை, அதாவது 33 மாதங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டது.
சர்வே
இதற்கான வரைவு அறிக்கை இன்னும் தொழிலாளர் நலத் துறை மூலம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனினும் கடந்த மார்ச் 27-ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சர்வேயை எடுத்தது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை முத்ரா திட்ட பயனாளிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தது.
3 வகை திட்டம்
அதில் சிசு, கிஷோர், தருண் ஆகிய 3 முத்ரா திட்டங்களின் கீழ் மொத்தம் 5.71 லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனர். சராசரியாக 46,536 ரூபாய் கடன் பெற்றுள்ளனர். சிசு (50 ஆயிரம் வரை) திட்டத்தின் கீழ் மொத்த கடன் தொகையில் 42 சதவீதம் கடந்த 2017-18-ஆம் ஆண்டு கிடைத்துள்ளது. அது போல் கிஷோர் (50 ஆயிரம் முதல் ரூ5 லட்சம் வரை) திட்டத்தின் கீழ் 34 சதவீதமும் தருண் (5 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரை) திட்டத்தின் கீழ் 24 சதவீதமும் கிடைத்துள்ளது.
கடன்
சிசு திட்டத்தின் கீழ் 66 சதவீதமும் கிஷோர் திட்டத்தின் கீழ் 18.85 சதவீதமும் தருண் திட்டத்தின் கீழ் 15.51 சதவீதமும் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளது. புதிய தொழில்கள் தொடங்குவதற்காக 19,396 பேர் கடன் பெற்றுள்ளனர். அதாவது 20.6 சதவீதம் ஆகும். அது போல் ஏற்கெனவே உள்ள தொழிலை விஸ்தரிக்க 74,979 பேர் கடன் பெற்றுள்ளனர். அதாவது 79.4 சதவீதம் ஆகும்.
புதிய தொழில்
5 பேரில் ஒருவர் மட்டுமே புதிய தொழிலை தொடங்க கடன் பெற்றுள்ளனர். ஏனையவர்கள் பழைய தொழிலை விஸ்தரிக்கவே பெற்றுள்ளனர். கடன் பெற்றவுடன் புதிய தொழிலை தொடங்கியுள்ளீர்களா என பயனாளிகளிடம் சர்வேயில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அரசின் வரைவு அறிக்கை அது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
ஊதியம்
புதிய தொழிலை தனியாகவோ பார்ட்னர்களுடனோ தொடங்குபவர்களும், அந்த தொழிலில் தங்கள் குடும்பத்தினரையே சம்பளம் இல்லாமல் பணிக்கு அமர்த்துபவர்கள், வேறு ஆட்களை சம்பளத்துக்கு நியமிப்பவர்கள் சுயதொழில்கள் என சர்வேயில் வரையறுக்கப்பட்டுள்ளன. எனினும் விவசாயத் துறையில் முத்ரா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றவர்கள், புதிய தொழில் தொடங்கியவர்கள் குறித்த எந்த தகவலும் சர்வேயில் இல்லை. மொத்தம் 5 கோடி பேரில் 3.1 கோடி பேர் சுயத் தொழில் செய்பவர்களும், 1.95 கோடி பேர் ஊதியத்துக்கு பணியில் அமர்த்தப்பட்டவர்களும் ஆவர்.