குழந்தைகளை வைத்து பண்ற நிகழ்ச்சியா இது.. டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை
டெல்லி: தொலைக்காட்சி சேனல் ரியாலிட்டி ஷோக்களில் சிறுவர், சிறுமிகளை அநாகரீகமான முறையில் நடனம் ஆட வைக்க கூடாது என்று, அனைத்து தனியார் சாட்டிலைட் டிவி சேனல்களுக்கும், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எந்த டிவி சேனலை பார்த்தாலும் இப்போதெல்லாம் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தாமல் இருப்பதில்லை. அதிலும், டான்ஸ் ஷோக்களுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது.
இதுபோன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளில், திரைப்படங்களில் செய்த அதே அங்க அசைவுகளை நடனமாக்கி, சிறுவர், சிறுமிகள் ஆடுவதையும் பார்க்க முடியும். வயதுக்கு வந்த பெரியவர்களுக்கான அந்த நடனங்களை சிறுவர், சிறுமிகள் ஆடுவது என்பது அறுவறுக்கத்தக்கதாக உள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், இப்போதெல்லாம், பெற்றோர் உட்பட பெரியவர்கள் கூட, சிறுவர், சிறுமிகளின் இந்த நடனத்தை கை தட்டி ஆதரிக்கிறார்கள். அதன் பின்விளைவுகளையும், அறுவெறுப்பையும் அவர்கள் உணர்ந்தபாடில்லை. இந்த நிலையில்தான், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக எச்சரிக்கை, முக்கியத்துவம் பெறுகிறது.
செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சிறுவர்கள் வயதுக்கு எந்த வகையிலும் ஒத்துவராத நடனங்கள், சித்தரிப்புகள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அரங்கேறுகின்றன.
இது அவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். பார்ப்பதை அப்படியே மனதில் பதிய வைக்கும் பருவம்தான் குழந்தை பருவம். எனவே இதுபோன்ற அநாகரீகங்கள் அவர்கள் மனதில் பதிவாகும். இதை கருத்தில் கொண்டு சாட்டிலைட் டிவி சேனல்கள் இதுபோன்ற நடனங்களை தவிர்க்க வேண்டும்.
கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் (ஒழுங்குமுறை) சட்டம், 1995க்கு உட்பட்டு, அதில், தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தனியார் டிவி சேனல்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.