மன்மோகன் சிங்கிற்கு அச்சுறுத்தல் இல்லை.. சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்தது மோடி அரசு
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு திருப்பி பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1985-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) அமைக்கப்பட்டது. சிஆர்பிஎஃப், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகிய துணை ராணுவப் படைகளிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பாதுகாப்பு படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதுவரை இந்தியாவில் தற்போது சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்றவுடன் எஸ்பிஜி மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மத்திய உள்துறை அமைச்சகம், கேபினெட் அமைச்சகம், உளவுத் துறை ஆகியவை ஈடுபட்டது. 3 மாதங்கள் நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு பதில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது. மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை ஆய்வு செய்த பின்னர் எஸ்பிஜி விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வராதநிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.