ஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மறுத்துள்ளார். கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து (370வது பிரிவு) கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அன்று முதல் தற்போது வரை தொடர்ந்து 21 நாள்காக சந்தைகள், கடைகள் மற்றும வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல் பொதுபோக்குவரத்து பெரிய அளவில் முடங்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருந்துகள், காய்கறிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் பரவியது. இதனை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லிக்கு டெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்த வந்த சத்யபால் மாலிக், இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருந்து உள்பட எந்த ஒரு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. நாங்கள் வீடுகளுக்கு கறிகள், காய்கறிகள், மற்றும முட்டைகள் என அனைத்தும் பக்ரீத்தின் போது வழங்கி உள்ளோம்.
உங்கள் அபிப்ராயங்கள் இன்னும் 10 அல்லது 15 நாளில் மாறிவிடும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுபபாடுகள் தளர்த்தப்பட உள்ளது. காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு அமல்படுத்தும் முன்பு வன்முறையில் 50 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. உயிரிழப்பு இல்லாமல் அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் உள்ள மாவட்ட நீதிபதி சாகித் சௌத்ரியும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மருத்து தட்டுப்பாடு ஏற்படவே இல்லை என்று மறுத்துள்ளார். இதனிடையே ஜம்மு காஷ்மீரில் ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும் லேண்ட் லைன் தொலைத்தொடர்பு சேவைகள் பெரும்பாலான இடங்களில் இயங்குவதாகவும் அதிகாரிகள் கூறினர்.