டெல்லி கலவர செய்திகளால் அதிருப்தி.. ஏசியாநெட் உட்பட 2 மலையாள டிவி சேனல் ஒளிபரப்புக்கு 48 மணி நேர தடை
டெல்லி: டெல்லி வன்முறை செய்திகளை ஒளிபரப்பியதில், எல்லை மீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் நியூஸ் ஒன் டிவி, என்ற இரு மலையாள டிவி சேனல்களை, அடுத்த, 48 மணி நேரம் ஒளிபரப்புவதற்கு மத்திய செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மத கலவரங்களில் 53 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மதக் கலவரம் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பும் போது மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்று ஏற்கனவே செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் எச்சரித்திருந்தது.
இந்தநிலையில் எச்சரிக்கையை மீறி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் டிவி ஆகிய இரு சேனல்களும் செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி அடுத்த 48 மணி நேரத்துக்கு, 2 சேனல்களையும் ஒளிபரப்புவதற்கு, செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இன்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல், அந்த இரு சேனல்களின் டிவி திரையும் கருப்பு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. மார்ச் 8ம் தேதி, இரவு 7.30 மணிக்கு மேல்தான் அவை தங்கள் ஒளிபரப்பை மீண்டும் துவக்க முடியும்.
இந்த இரு சேனல்களும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றும் ஒரு சார்புடைய செய்திகளை ஒளிபரப்பியதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் டெல்லி காவல்துறையை இழிவுபடுத்தும் வகையில் செய்தி ஒளிபரப்பியதாகவும், குற்றஞ்சாட்டியுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கூடிய பகுதிகளில்தான் வன்முறை நடந்துள்ளதாகவும், அந்த சேனல்கள் தங்களது செய்திகளில் கூறுகின்றன. கல் வீசுவது, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது போன்ற காட்சிகளையும் அந்த சேனல்கள் ஒளிபரப்பி உள்ளன. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இந்த செய்திகள் இருந்தன. இவ்வாறு அந்த உத்தரவில் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.