ரூ. 25 ஆயிரம் கோடி திரட்ட... தாஜ் மஹாலை குத்தகைக்கு விட முடிவு? என்ன சொல்கிறது மத்திய அரசு
டெல்லி: தாஜ்மஹால் உள்ளிட்ட 100 பாரம்பரிய சின்னங்களின் பராமரிப்பு தனியாரிடம் குத்தகைக்கு விடப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
நாட்டிலுள்ள பாரம்பரிய சின்னங்கள், தேசிய பூங்காக்கள், விளையாட்டு அரங்கங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றைக் குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. இதன் மூலம் அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள தாஜ்மஹால், ஹிமச்சல் பிரதேசத்திலுள்ள காங்க்ரா அரண்மனை என 100 பாரம்பரிய சின்னங்களைக் குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் பரவியது. இதைக் காங்கிரஸ் கட்சியும் கடுமையாகக் கண்டித்திருந்தது.
காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டை விற்க மாட்டேன் என்று கூறி ஆட்சியைப் பிடித்தவர், இன்று நாட்டிலுள்ள அனைத்து இடங்களையும் குத்தகைக்கு விட்டு வருகிறார். இது மிகவும் அவமானகரமான விஷயம் என்று பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தகவலை தற்போது மோடி அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. மத்திய கலாசார அமைச்சகம் இதுபோன்ற எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.