அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
டெல்லி: வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலகெடுவை ஜூலை 31ல் இருந்து ஆகஸ்ட் 31 ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோர் 2018-2019ம் ஆண்டு நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கு வரும் ஜூலை 31ம் தேதி கடைசி தேதி என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இதனால் வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் உள்பட பலரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கணக்கு தணிக்கை செய்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்தற்கு இயலாத நிலையில் இருந்தனர். இதனால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதை ஏற்று மத்திய வருமான வரிகள் ஆணையம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை ஜுலை 31ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதியாக நீடித்து செவ்வாய்கிமை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பார்ம் 16 டிடிஎஸ் சான்றிதழ்களை சமர்பிக்க கடந்த மாதம் 15 ம் ததி கடைசி என்று இருந்ததை ஜூலை 10ம் தேதி கடைசி நாள் என 25 நாள்கள் காலக்கெடுவை நீடித்து வருமான வரிகள் ஆணையம் நீட்டித்து இருந்தது.