அதிமுகவை வைத்து நாடாளுமன்றத்தை சீர்குலைக்கிறது மத்திய அரசு.. திரினமூல் குற்றச்சாட்டு
டெல்லி: அதிமுக உறுப்பினர்களை வைத்து லோக்சபா கூட்டத்தை சீர்குலைக்கிறது மத்திய அரசு என்று திரினமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே, காவிரிப் பிரச்சினையை வைத்து அனல் பறக்கும் விவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு அவைகளின் கூட்டமும் பாதிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபா 2 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல லோக்சபாவும் நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து திரினமூல் காங்கிரஸ் உறுப்பினரும், ராஜ்யசபா கட்சித் தலைவருமான டெரிக் ஓ பிரையன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், திரினமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச ஆர்வமாக உள்ளனர். நாடாளுமன்றம் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த தனது கூட்டாளி கட்சியை வைத்து நாடாளுமன்றக் கூட்டங்களை அரசு சீர்குலைக்கிறது என்று கூறியுள்ளார் டெரிக் ஓ பிரையன்.
அதிமுக என்று அவர் பெயர் குறிப்பிடவில்லை. அதிமுகவைத்தான் அவர் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். ராஜ்யசபாவில் தமிழகத்தைச் சேர்ந்த இரு பெரும் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் காவிரிப் பிரச்சினைக்காக இன்று மோதிக் கொண்டன.
அதேபோல லோக்சபாவில் ரபேல் பேர ஊழல், ராமர் கோவில் விவகாரம், காவிரிப் பிரச்சினை ஆகியவற்றை வைத்து பெரும் அமளி ஏற்பட்டது. இன்று அவை கூடியதும் காங்கிரஸ், சிவசேனா, தெலுங்கு தேசம், அதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுக உறுப்பினர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடும் துயரங்களைச் சந்தித்து வருவதாக கூறி முழக்கமிட்டனர். இந்த தொடர் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.