அனைவரிடமும் கேட்டு தான் சட்டம் கொண்டு வந்தோம் : தோமர் விளக்கம்
டெல்லி : அனைத்து மாநிலங்களிடமும் கருத்து கேட்ட பிறகு தான் வேளாண் மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட்டதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து ஜனவரி 26 அன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளும் டெல்லி - உத்திர பிரதேசம்-பஞ்சாப் எல்லையில் தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் ஒருபுறம் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் பாதுகாக்கவும், விவசாயிகளின் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும் டெல்லி போலீஸ் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கிடையே வெளிநாட்டு பிரபலங்கள் பலர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது சர்ச்சையாகி உள்ளது.
ஜனவரி 29 ம் தேதி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது முதல், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வருகின்றன. இதனால் இரு அவைகளும் அடுத்தடுத்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி... விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது பைசர்
இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான விவாதத்தின் போது எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் மசோதா தொடர்பாக ஆன்லைன் கருத்தரங்குகள், பயிற்சிகள், டெலி கான்பிரன்சிங், சமூக வலைதளம் மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக முன்கூட்டியே அரசு ஆலோசனை நடத்தியது.
வேளாண் மசோதாக்கள் மீது முறையான நடைமுறைகளை பின்பற்றியே 2020ல் சட்டமாக இயற்றப்பட்டது. மசோதா வரைவு முன் வடிவம் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு கருத்து கேட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றி 2020 மே 21 அன்று மாநிலங்களுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் கருத்து கேட்டு, ஆலோசிக்கப்பட்டது. இதில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர் என்றார்.