வேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு...நாளைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா?
டெல்லி: விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மத்திய அரசின் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
நாளை விவசாயிகளுடன் 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் கூறினர்.
தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 57-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்தது.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்த நிலையில் நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இறங்கி வந்த அரசு
பேச்சுவார்த்தையின் முதல் இரண்டு சுற்றில் எந்த முடிவும் கிடைக்கவில்லை. மத்திய அரசும், விவசாயிகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கலாம், இதற்கு ஒரு குழுவை அமைத்து தீர்வு காணலாம் என மத்திய அமைச்சர்கள் யோசனை கூறினர். அந்த குழு அறிக்கை அளிக்கிற வரையில் வேளாண் சட்டங்ககளை நிறுத்தி வைக்கலாம். விவசாயிகளும் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் சொல்வது என்ன?
இது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டியதுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து வரும் நாளை விவசாயிகளுடன் 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் அளவுக்கு அரசு இறங்கி வந்துள்ளதால், இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்ததாகவும், நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என்றும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
எந்த மாற்றமும் இல்லை
இது தொடர்பாக விவசாய சங்க தலைவர்கள் கூறுகையில், ஒன்றரை வருடங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. சட்டங்களை இடைநிறுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அதேபோல் திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றனர்.
டிராக்டர்கள் பேரணி
குடியரசு தினம் அன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்கள் கொண்டு பிரமாண்ட பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு வந்து பேரணியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.