மிகப்பெரிய விலை.. இந்தியாவுக்கு வாய்ப்பே இல்லை.. 'ஹெர்ட் இம்யூனிட்டி' குறித்து மத்திய அரசு
டெல்லி: இந்தியாவை போன்ற பெரிய நாட்டிற்கு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (ஹெர்ட் இம்யூனிட்டி) ஒரு யுக்தி சார்ந்த தேர்வாகவோ அல்லது விருப்பமாகவோ இருக்க முடியாது என்று மத்திய அரசு வியாழக்கிழமை கூறியது.
ஏனெனில் இந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்தி( ஹெர்ட் இம்யூனிட்டி) என்பது பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பின்னர் மற்றும் பல பேர் இறந்த பின் வருவதாகவும், எனவே தற்போதைய நிலையில் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி வரும் வரை சமூக விதிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே சாத்தியமான வழியாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 15,83,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 34,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 775 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 52,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது தினசரி வேகம் அண்மைக் காலமாக 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 700க்கும் அதிகமாக உள்ளது.
தடுப்பூசி இல்லை
தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று நோயை தடுப்பது என்பது இந்தியாவில் மிகவும் சவாலான காரியமாக உள்ளது. அத்துடன் கொத்துக்கொத்தாக மக்கள் பாதிக்கப்படுவதால் சிகிச்சை அளிப்பதும் சவாலாக உள்ளது. இதனால் அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி மக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வைக்க போராடி வருகிறது.
தொற்று குறைந்ததன் பின்னணி
இந்நிலையில் இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வே மற்றும் குறைந்தபோன தொற்று வீதங்களின் அடிப்படை பார்த்தால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் தொற்றுகள் மற்றும் வாதங்களின் பின்னணியில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. உதாரணமாக டெல்லி மற்றும் சென்னை, மும்பையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
மிகப்பெரிய விலை
இது குறித்து மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், " இந்தியா போன்ற மக்கள்தொகை உள்ள நாட்டில், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு யுக்தி சார்ந்த தேர்வாகவோ அல்லது விருப்பமாக இருக்க முடியாது. இது மிகப்பெரிய விளைவுகளுக்கு பின் வருவதாகும்.இதற்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.
Recommended Video
தடுப்பூசி வரும் வரை
இதன் பொருள் என்னவென்றால், பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பலர் இந்த செயலில் இறந்துவிடுவார்கள். அதன்பின்னரே மந்தை நோய் எதிர்ப்பு சக்தி வரும். . எனவே தற்போதைய நிலையில் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி வரும் வரை சமூக விதிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே சாத்தியமான வழியாக இருக்கும் என்றார்.