ராணுவ வீரர்களுக்கான மாற்றுத்திறனாளி பென்சனுக்கும் வரியா? கொதித்த காங்.! ராஜ்நாத்சிங் பதில்
டெல்லி: ராணுவ வீரர்களுக்கான மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திற்கு வரி விதிப்பது தொடர்பான விஷயத்தை அரசு பரிசீலிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையின், பூஜ்ஜிய நேரத்தில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அவர் பதிலளித்து இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதை நான் பரிசீலிப்பேன் என்றும் ராஜ்நாத்சிங் கூறினார். பாதுகாப்பு துறை, மற்றும் ராணுவ வீரர்களின் நலன்கள் அரசின், முன்னுரிமை. கடந்த 40 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒரு ரேங்க் ஒரு ஓய்வூதியத்தை அமல்படுத்தியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
ராணுவ வீரர்களின், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கு வரி விதிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கையில் எடுத்துள்ளதை, காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. பாஜக அரசு, ராணுவ செலவினங்களைக் குறைப்பதன் மூலம், ராணுவத்தை மீண்டும் அவமதித்துள்ளது என்றும் குற்றம்சாட்டியது.
காங்கிரஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "நாட்டின் முக்கிய சேவையின் போது, ராணுவ வீரர்கள் காயங்கள் காரணமாக மாற்றுத்திறனாளியாக மாறுகிறார்கள். அவர்கள் பணி உயர்வு பெற முடிவதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்துடன், பெரும்பான்மையானவர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஓய்வூதியத்தின் மீது வரி போடுவது என்பது ராணுவ வீரர்களுக்கு செய்யும் துரோகம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.