ரூ.30000 கோடி வேண்டும்.. தாருங்கள்.. மீண்டும் ஆர்பிஐயை நாடும் மத்திய அரசு.. திடுக் காரணம்!
மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் இடைக்கால ஈவுத்தொகையாக 30 ஆயிரம் கோடி ரூபாயை கேட்க முடிவு செய்துள்ளது.
டெல்லி: மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் இடைக்கால ஈவுத்தொகையாக 30 ஆயிரம் கோடி ரூபாயை கேட்க முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இந்த நிதி ஆண்டின் இறுதியில் இதற்காக மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பை அணுக முடிவு செய்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் நிதி கேட்டுக்கொண்டு இருந்தது. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் நிதி கேட்டது. ஆனால் ஆர்பிஐ இதை தொடர்ந்து மறுத்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார்.
தொடர் பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் இந்த பணம் பெறப்பட்டது. இது ஆர்பிஐ அமைப்பின் உபரி நிதி ஆகும். இதை அவசரகாலத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை பெற்ற பின்பும் கூட நிதி நிலைமை சரியாகவில்லை.
முக்கியமாக இந்தியாவில் இந்த நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டு ஜிடிபி 5% என்ற மிக மோசமான சதவிகிதத்தை தொட்டது. மத்திய அரசை இது பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால் இந்த நிதி ஆண்டில் கண்டிப்பாக நிதி பற்றாக்குறை ஏற்படும், ஜிடிபி இறுதியாக மேலும் குறையும் என்று கணிக்கப்படுகிறது.
ஆகவே இந்த நிதி ஆண்டின் இறுதியில் பணத்தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் இடைக்கால ஈவுத்தொகையாக 30 ஆயிரம் கோடி ரூபாயை கேட்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 2018 - 19 நிதி ஆண்டுக்கு ஈவுத் தொகை (Dividend) மற்றும் இடைக்கால ஈவுத் தொகையாக (Interim Dividend) ஆக சுமார் 40,000 கோடி கொடுத்தது.
அதன்பின் தற்போது மீண்டும் மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் இடைக்கால ஈவுத்தொகையாக மத்திய அரசு பணம் கேட்க இருப்பது குறிப்பிடத்தக்கது.