ஆம் ஆத்மியின் அபார பக்தி... அயோத்தி ராமர் கோவிலில் பிரமாண்ட ஹனுமன் சிலை வைக்க வேண்டுமாம்!
டெல்லி: பாஜக ராமன் மீதான பக்தியை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறது.. இதே பாணியில் ஹனுமன் மீதான பக்தியை அதிகமாக வெளிப்படுத்தி வருகிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.
டெல்லி சட்டசபை தேர்தலில் தம்மை இந்துத்துவா எதிர்ப்பாளராகவும் ஆதரவாளராகவும் காட்டிக் கொள்ளாமல் நடுநிலையாக காட்டிக் கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால். அதாவது பாஜகவை கடுமையாக எதிர்க்கவும் இல்லை; அதேபோல் சிஏஏவுக்கு எதிரான ஷாகீன் பாக் போராட்டங்களையும் அவர் ஆதரிக்கவும் இல்லை.
இத்தகைய மையவாத நிலைப்பாட்டில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் வாக்குகள் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அமோகமாக கிடைத்தன. இதனால் டெல்லியில் 3-வது முறையாக ஆம் ஆத்மி கட்சி அரியணை ஏறி இருக்கிறது.
டெல்லி தேர்தலின் போது இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தம்மை ஹனுமனின் பக்தராக வெளிப்படுத்தினார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி தேர்தலுக்கான வாக்கு பதிவுக்கு முன்னர் ஹனுமன் கோவிலில் வழிபாடு செய்தார்.
அதேபோல் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் ஜெய் ஹனுமன் என்கிற கோஷத்தை முன்வைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் கிரேட்டர் கைலாஷ் எம்.எல்.ஏ. சவுரப் பரத்வாஜ், தமது கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் ஹனுமனின் புகழ் பாடும் சுந்தர காண்டம் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை தோறும் என நடத்துவோம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அத்துடன் நிற்காமல் தற்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் போது அங்கே பிரமாண்டமான ஹனுமன் ஜி சிலையையும் நிறுவ வேண்டும்; ராமனுக்கு மிகவும் பிடித்தமானவர் ஹனுமான். அதனால் அவருக்கு அங்கே பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் சவுரப் பரத்வாஜ்.