மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு சூப்பர் செய்தி.. கிராஜூட்டி பெறுவதற்கு வரம்பை நீக்க அரசு பரிசீலனை?
டெல்லி: ஒப்பந்த வேலைகளால் குறுகிய காலம் மட்டுமே வேலை பார்க்கும் சூழல், பணி பாதுகாப்பு இன்மை போன்ற பிரச்சனைகள் காரணமாக பணிக்கொடை ( கிராச்சுட்டி ) நிதியை பெறுவதற்கான ஐந்தாண்டு காலம் என்ற வரம்பை குறைப்பதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பணிக்கொடை (Gratuity) என்பது தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப அந்நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கும் தொகை ஆகும். 1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் விதிமுறைப்படி , ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஐந்து வருடங்கள் ஊழியர்கள் பணியாற்றிய ஊழியர்களுக்கு கிராச்சுட்டி வழங்கப்படுகிறது.
ஐந்து வருடத்திற்கு பின் வழக்கமாக ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது அல்லது வேலையிலிருந்து நீக்கப்படும் போது அல்லது அவர் ஓய்வு பெறும்போது இந்த தொகை வழங்கப்படுகிறது. அதேபோல ஒரு ஊழியர் இறந்தால் அல்லது விபத்து காரணமாக வேலையை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், அவர்கள் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான பணியில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு பணிக்கொடை (நன்றித் தொகை என கூறுவார்கள்) வழங்கப்பட வேண்டும். இறந்தவர்களின் வாரிசுகளுக்கு இந்த கிராச்சுட்டி வழங்கப்படுகிறது.
மன்னிப்பு கேட்க முடியாது.. காஷ்மீர் பிரச்சனை பற்றி பேச போகிறேன்.. மலேசியா மகாதீர் பரபரப்பு கருத்து!
யாருக்கு கிராச்சுட்டி
கிராச்சுட்டி சட்டம் 1972 விதிகளின்படி, அதிகபட்சமாக ரூ .20 லட்சம் வரை இருக்கலாம். கிராச்சுட்டியைப் பொறுத்தவரை, ஊழியர் ஒரே நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயமாகும். இந்த கால கட்டத்திற்கு குறைவாக ஒருவர் வேலையை விட்டு வெளியேறினால், பணியாளருக்கு கிராச்சுட்டி பெற தகுதி (Gratuity Eligibility) இல்லை. 4 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் பணியாற்றி இருந்தாலும் கிடைக்காது.
5வருட வரம்பு குறைகிறது
இந்நிலையில் ஒப்பந்த வேலை முறையால் குறுகிய காலம் மட்டுமே வேலை பார்க்கும் சூழல், பணி பாதுகாப்பு இன்மை போன்ற காரணத்தால் ஒருவர் குறைந்தபட்சம் ஐந்து வருடம் தொடர்ச்சியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது இயலாத காரியமாக மாறி வருகிறது. எனவே கிராச்சுட்டி தகுதி அளவுகோல்களைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு பரிசீலனை
இதனால் கிராச்சுட்டி தகுதிக்கான அளவுகோல்களை எளிதாக்குவது மற்றும் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு இடையில் வைத்திருப்பது குறித்து விவாதங்கள் நடத்தப்படும் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது. ஒப்பந்த வேலைவாய்ப்புகள் வளர்ந்து வரும் போக்கு மற்றும் பணி பாதுகாப்பு குறைந்து வருவது ஆகீய இரண்டு முக்கிய காரணங்களால் இந்த முறையை மத்திய அரசு பரிசீலிப்பதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தன.
நாடாளுமன்ற நிலைகுழு
கிராச்சுட்டிக்கான 5 வருட காலம் எவ்வாறு குறைக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், கிராச்சுட்டி செலுத்துதலுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். லைவ்மின்ட்.காம் உடன் பேசிய இரண்டு அதிகாரிகளில் ஒருவர், தொழிலாளர் தொடர்பான நாடாளுமுன்ற நிலைக்குழுவும் இதை பரிந்துரைத்துள்ளது என்று கூறினார்.
தொழிலாளர்கள் கோரிக்கை
தொழிலாளர் சந்தை வல்லுநர்களின் கருத்து என்னவென்றால், ஐந்தாண்டு கிராச்சுட்டி கால வரம்பு காலாவதியானது மற்றும் ஊழியர்களின் ஆர்வத்தை நிலைநிறுத்துவதில் இது சாத்தியமில்லை. தவிர, சில தொழிற்சங்கங்கள் பல நிறுவனங்கள் தொழிலாளர்களை செலவினங்களைச் சேமிப்பதற்காக கிராச்சுட்டி கொடுப்பனவுகளுக்கு தகுதி பெறுவதற்கு முன்பு அவர்களை வேலையில் இருந்து நீக்குகின்றன என்பதை எடுத்துரைத்துள்ளன. பல வல்லுநர்களும் கிராச்சுட்டி பணம் செலுத்தும் வரம்பை 2-3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
உறுதி செய்யவில்லை
கிராச்சுட்டிக்கான 5 வருட காலம் குறைப்பதற்கானநடவடிக்கை பரிசீலிக்கப்படுவதாக இரு அரசாங்க அதிகாரிகளும் தெரிவித்தாலும், தொழிலாளர் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை.