சாமானியர்கள் மீது சவுக்கடி.. பெட்ரோல், டீசல் மீது வரியை கூட்டிய கையோடு.. மொபைல் போனுக்கு 18% ஜிஎஸ்டி
டெல்லி: கொரோனா காரணமாகவும், பொருளாதார மந்த நிலை காரணமாகவும், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரு அதிர்ச்சியை மத்திய அரசு இன்று மக்களுக்கு அளித்துள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைகிறது. ஆனால், திடீரென மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தி இன்று அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள், செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த ஜிஎஸ்டி குழு முடிவு செய்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 39வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 39 வது கூட்டத்தில், மொபைல் போன்கள் 18 சதவீத வரி அடுக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. மொபைல் போன்களின் சில உதிரிபாகங்கள் வரியும் கூட்டப்பட்டுள்ளது. முன்னதாக இவை 12% பிரிவில் இருந்தது. எனவே, மொபைல் போன்களுக்கான வரி 6% அதிகரித்துள்ளது.
எனவே, வரும் காலங்களில், மொபைல் போன்கள் விலை அதிகரித்துவிடும். ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து புதிய வரி அமலுக்கு வருகிறது.
மொபைல் போன்கள் விலை முன்பை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே ஒரு ஐயம் இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக, அதன் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவால் வழங்கப்பட்ட செல்போன் சப்ளைதான் அதிகம். ஆனால் அங்குதான் கொரோனா பாதிப்பும் அதிகம். எனவே, உற்பத்தி இல்லாமல், மொபைல் போன்கள் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஜிஎஸ்டி வரியையும் கூட்டியுள்ளதால், மக்கள் நிலை பரிதாபம்தான்.
விமானத்தின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு (எம்.ஆர்.ஓ) சேவை ஜி.எஸ்.டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 18 சதவீத அடுக்கில் இருந்தது, இப்போது அது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எம்.ஆர்.ஓ சேவையை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளது.