7 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 28%ல் இருந்து 18% ஆக குறைந்தது.. 33 பொருட்களுக்கு வரி குறைப்பு
டெல்லி : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில், 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டது. பல்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டன.
சில பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்பட்டதாகவும், இதை குறைக்க வேண்டும் என மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஒவ்வொரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் போது குறிப்பிட்ட அளவு பொருட்களின் விலையை மத்திய அரசு குறைத்து வந்தது. இதற்கிடையே 5 மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இந்த முடிவு பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பாஜக புறக்கணிப்பு
இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜிஎஸ்டி, ஆதார் கட்டாயம், ரூபாய் நோட்டு தடை உள்ளிட்ட மத்திய அரசு அமல்படுத்திய பல்வேறு திட்டங்களால் மக்கள் அதிருப்தி அடைந்ததால் தேர்தலில் பாஜக புறக்கணிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
|
வரி குறைப்பு அறிவிப்பு
இந்த முடிவு வரக்கூடிய லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற அச்சம் பாஜக தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே 99 சதவீத பொருட்கள் 18 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும் என்று 2 தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு
அந்தவகையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
|
மத்திய அரசு அறிவிப்பு
கூட்டத்தின் முடிவில், 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது என இதற்கான கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28%இல் இருந்து 18%ஆக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 12%இல் இருந்து 5% ஆக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.