ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு.. சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு பம்பர் பரிசு!
டெல்லி: வணிக நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கை இரட்டிப்பாக்கி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 32வது கூட்டம் டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.
ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பின்னர் நிருபர்களிடம் அருண்ஜெட்லி கூறியதாவது: 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் ஆகும்போது ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற வரம்பு, இனிமேல் 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. எனவே இனிமேல், 40 லட்சம் ரூபாய் வரை வர்த்தகமாகும் போது அதற்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியது கிடையாது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பகுதி மாநிலங்களில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி உச்ச வரம்பு, 10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது இனிமேல் 20 லட்சமாக உயர்த்தப்படும். 20 லட்சத்துக்கு மேலே வர்த்தகம் செய்தால் ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது.
கேரளாவைப் பொறுத்த அளவில் அதிகபட்சமாக, 1 சதவீதம் வரை செஸ் வரி வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
Chaired 32nd meeting of the GST Council, Delhi, January 10, 2019 pic.twitter.com/oVIZnbRhhw
— Arun Jaitley (@arunjaitley) January 10, 2019
மேலும், இதுவரை, விற்பனை வணிகங்களுக்கு மட்டும் இருந்து வந்த காம்போஷிசன் ஸ்கீம் எனப்படும் சலுகை திட்டம், இனி, சேவைத் துறை சார்ந்த வணிகங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பொறுத்தளவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு பிறகு கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வணிக நிறுவனங்களுக்கான, ஜிஎஸ்டி வரி, வரம்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.