விவசாயிகளுக்கு நேரடி நிதி.. 6000 ரூபாய் பெற என்ன தகுதிகள் தேவை? பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு
டெல்லி: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் ரொக்கப்பணம் அளிக்கும் மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு பயனடைய தகுதியுடையோருக்கான விதிமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
'பிரதான் மந்திரி கிசான் சம்மான்' என்ற பெயரில் இந்த திட்டம் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பின் படி 2 ஹெக்டேர்களுக்கு குறைவாக பயிர் செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை நேரடியாக அவர்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக நாடு முழுவதும் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தனது பட்ஜெட் உரையின் போது குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின், முதல் கட்டமாக வரும் மார்ச் இறுதிக்குள் 2000 ரூபாய் ரொக்கப் பணத்தை வங்கியில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பலன் அடைவதற்கு, தேவைப்படும் தகுதிகள் என்ன என்று குறிப்பிட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
*முன்னாள் மற்றும் இந்நாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் முன்னாள் அல்லது இந்நாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் முனிசிபாலிட்டி மேயர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயனடைய முடியாது.
*முன்னாள், இந்நாள் மத்திய அல்லது மாநில அரசு ஊழியர்கள் பலன் அடைய முடியாது. ஆனால் பிரிவு 4 மற்றும் குரூப் டி ஊழியர்கள் இதில் அடங்க மாட்டார்கள்.
*முன்னாள், இந்நாள் அரசியலமைப்பு பதவி வகிப்போருக்கு நிதி உதவி கிடையாது. மேலும், டாக்டர்கள், இன்ஜினியர்கள், வழக்கறிஞர்கள், சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ் போன்ற தொழில் பூர்வ அமைப்புகளுடன் பதிவுசெய்து இருக்கக்கூடிய நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் இல்லையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் பலனாளிகளின் பட்டியலை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.