பாயும் புது ரத்தம்.. ராகுல் முன்னிலையில் காங்கிரசில் நாளை இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்ஹையா குமார்
டெல்லி: குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும், மக்கள் செல்வாக்கு மிக்க தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி மற்றும் முன்னாள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தலைவர் கன்ஹையா குமார் ஆகிய இருவரும், செப்டம்பர் 28ம் தேதியான நாளை காங்கிரசில் இணைகிறார்கள்.
பாஜக ஆண்டு வரும் குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடைபெறும் இந்த நிகழ்வு, காங்கிரசுக்கு பெரும் பூஸ்ட் என்கிறார்கள்.
3 மேட்டர்கள்.. 13 திமுக அமைச்சர்கள்.. அஸ்திரத்தை கையிலெடுத்த எடப்பாடி..
மேவானி 2017 ல் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்கம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸின் ஆதரவுடன் சுயேச்சையாக வெற்றி பெற்றார். ஏனெனில் காங்கிரஸ் அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவில்லை.
இருவர் இணைப்பு
இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், "செப்டம்பர் 28 ஆம் தேதி, நான் காங்கிரசில் கன்ஹையா குமாருடன் சேரப் போகிறேன்," என்று கூறியுள்ளார். அதன் பிறகு தான் தனது செயல்பாடுகள் பற்றி விரிவாகப் பேச முடியும் என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் இணைப்பு நிகழ்ச்சி
டெல்லியில் நடைபெறும் இந்த இணைப்பு விழாவில் குஜராத் காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் படேல் கலந்து கொள்வார். அங்கு அவர்கள், ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் சேர்க்கப்படுவார்கள். "நாட்டின் வளர்ச்சிக்காகவும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேருவின் கொள்கைகளை வலுப்படுத்த விரும்பும் அனைத்து புரட்சிகர இளைஞர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்" என்று ஹர்திக் பட்டேல் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
புது ரத்தம்
காங்கிரஸில் கன்ஹையா குமார் மற்றும் மேவானி இணைவது அக்கட்சிக்கு புது உத்வேகத்தை அளிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களில் பல இளம் தலைவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டனர். ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பாஜகவுக்கு எதிராக இணைப்பு
இந்த இணைப்பு குறித்து, குஜராத் காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி, அளித்துள்ள பேட்டியில், 2017 தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் மேவானி எம்எல்ஏ ஆனார், மேலும் அவரது கட்சி நுழைவு "பாஜகவின் ஊழல் கொள்கைகளுக்கு எதிரான கட்சியின் போராட்டத்தை வலுப்படுத்தும்" பாஜகவின் ஊழல் கொள்கைகளுக்கு எதிராக போராடும் அனைவரையும் காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. கட்சியின் கொள்கை குஜராத்தில் அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதாகும், மக்கள் விரோதம், இளைஞர் எதிர்ப்பு, விவசாயி, ஏழைக்கு எதிரான பாஜகவின் ஒவ்வொரு கொள்கைக்கும் எதிராக போராடுவது எங்கள் குறிக்கோள்" என்று மணீஷ் தோஷி கூறியுள்ளார்.
இரு இளைஞர்கள்
பேச்சாற்றலுக்கு பெயர் பெற்றவர் கன்ஹையா குமார். அவர் காங்கிரசில் சேர்ந்தால், பீகார் மட்டுமல்லாது, உத்திரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வாக்குகளை ஈர்க்க முடியும் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது. 2016ம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள் அப்பல்கலைக்கழக மாணவர்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதில் ஒருவர் கன்ஹையா குமார். இதன்பிறகு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் முன்னணியில் இருந்தார். இவரது உரைக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. தனது பேச்சால் அனைவரையும் கட்டிப்போடும் திறன் கொண்டவராக இருந்தார்.