சண்டையிட்ட மனைவிக்கு பாடம் புகட்ட... 3 வயது மகளை சீரழித்துக் கொலை செய்ய முயற்சித்த தந்தை கைது!
குடிபோதையில் மகளை சீரழித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: குர்கானில் தன் சொந்த மகளையே பலாத்காரம் செய்த தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லிக்கு அருகே குர்கான் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளைஞர் மணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஓட்டுனரான மணிக்கு மனைவியும், மூன்று வயதிலும், ஒரு வயதிலும் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், மணி குடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால் மனைவி அவருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் தனது இளைய மகளை அழைத்துக் கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இதனால் மூத்த மகள் வீட்டில் தந்தையுடன் தனியாக இருந்துள்ளார்.
சண்டையிட்டதால் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த கணவர், அவருக்கு பாடம் புகட்ட நினைத்துள்ளார். மதுபோதையில் தனது மகளை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.
மறுதினம் காலை வீட்டிற்கு திரும்பி வந்த மனைவி, கட்டிலில் இரத்தக் கரையுடன் தன் மூத்த மகள் மயக்க நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அவர், இது பற்றி போலீசில் புகார் அளித்தார்.
மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை உறுதி செய்தனர். தற்போது டெல்லி சாப்டார்ஜாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தலைமறைவாக இருந்த சிறுமியின் தந்தையை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி சாம்ஷேர் சிங் தெரிவித்துள்ளார்.