டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றி .. ஊர்ல கல்யாணம்.. மார்ல சந்தனமாம்.. ப சிதம்பரத்தை கலாய்த்த எச் ராஜா
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி குறித்து ப சிதம்பரம் மகிழ்ச்சியாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டதை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா ட்விட்டரில் எந்த பிரச்சினையாவது கிளப்பி விட்டு அதில் குளிர் காய்வதே அவருக்கு வாடிக்கையாகும். இதற்கு பதிலடியாக நெட்டிசன்களிடம் செமையாக வாங்கியும் கட்டிக் கொள்வார்.
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான அன்று ட்விட்டரில் கும்பகோணம் குறித்த கதையை கூறிக் கொண்டிருந்தார் எச் ராஜா.
62 இடங்கள்
தங்கள் கட்சி வெற்றி பெற்றிருந்தால் அதற்கு எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்து நக்கல் நய்யாண்டி செய்து ட்வீட் வெளியிட்டிருந்திருப்பார். ஆனால் பாஜக வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி 62 இடங்களுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
மும்முனை போட்டி
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய 3 கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டாலும் பாஜக தோற்றுவிட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்துள்ளது. இதை வெளிப்படையாக ப சிதம்பரம் வெளிப்படுத்தினார்.
பாஜக தோல்வி
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஏமாற்று பேச்சுகள் தோல்வி அடைந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தை கொண்ட பாஜக தோற்கடித்துள்ளனர்.
|
எச் ராஜா கிண்டல்
2021, 2022 ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து எச் ராஜா கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் , ஆம் ஆத்மி கட்சி வெற்றி குறித்து ப.சிதம்பரம் பெருமிதம். ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனமாம் என்றார்.