ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களையும் பாதிக்கும்.. நாஸ்காம் எச்சரிக்கை
டெல்லி: இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக அமெரிக்கா 'எச்-1 பி' விசா வழங்குகிறது. இந்த விசா வழங்குவதில் தற்போது கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் அது இந்தியர்களுக்கு மட்டுமல்லாது அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தொழில்துறைக் கூட்டமைப்பான நாஸ்காம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணி புரியும் வகையில் H1B விசா வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டு தோறும் 65 ஆயிரம் 'எச்-1 பி' விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது. இந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் கடும் போட்டி இருப்பதால் அது குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள், உயர் கல்வி பெற்றவர்களுக்கு என தனியாக 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இந்த விசா பெற்றவர் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்யலாம். அவர்களது பணி சிறப்பாக அமையும்பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுக் காலம் இந்த விசாவை நீட்டித்துக்கொள்ளலாம். இந்த நிலையில் அமெரிக்க அரசு தனது விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள ஐடி பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த விசாவுக்கான விதிமுறைகள் கடுமையாக்கும் பட்சத்தில் இந்திய ஐடி துறையினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று தொழில்துறைக் கூட்டமைப்பான நாஸ்காம் எச்சரித்துள்ளது.
2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி டிரம்ப் அமெரிக்காவின் அதிபரான பின்னர் அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்' என்ற கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. இதன் விளைவாக எச்-1 பி' விசா கேட்டு விண்ணப்பிக்கிற இந்தியர்களின் விண்ணப்பங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் நிராகரிக்கப்படுகின்றன என ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. இது பணியாளர்களுக்கு மட்டுமல்லாது அமெரிக்காவில் கிளைகள் வைத்துள்ள இந்திய ஐடி நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் எனவும், அமெரிக்காவுக்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்களை இது பாதிக்கும் எனவும் இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமல்லாது அமெரிக்க நிறுவனங்களுக்கும் இந்த விசா கட்டுப்பாடுகள் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று நாஸ்காம் கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பெரும்பாலும் இந்திய பணியாளர்களே பணியாற்றுகின்றனர். அமெரிக்கர்களை விட குறைந்த ஊதியம், அதே வேளையில் அதிக திறனோடு இந்திய பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்பதால் இந்திய இந்திய ஐடி பணியாளர்களுக்கான தேவை அங்கு அதிகம். ஆகவே இந்த விசா கட்டுப்பாடுகள் இந்தியர்களை பாதிக்கும்போது அது அமெரிக்க நிறுவனங்களையும் கடுமையாக பாதிப்படைய செய்யும் என்பதே எதார்த்தம்.