ஊதியம் இல்லாத எச்ஏஎல் பொறியாளர்கள்.. வலை விரிக்கும் அனில் அம்பானி.. ராகுல் டுவீட்
டெல்லி: எச்ஏஎல் பொறியாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத நிலையில் எச்ஏஎல் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்தார்.
பாதுகாப்பு துறையை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த 2012-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியா முடிவு செய்தது.
இந்த நிலையில் அடுத்து வந்த பாஜக அரசு 126 ரபேல் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை மட்டுமே வாங்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். விமானத்தை தயார் செய்யும் பணியை எச்ஏஎல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்காமல் இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததால் அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்டது.
பூதாகரம்
எச்ஏஎல் நிறுவனம், டிஆர்டிஓ உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்க அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
ஓடி ஒளிந்து
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஆனால் அச்சமயத்தில் பிரதமர் அங்கு இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என ராகுல் விமர்சனம் செய்தார்.
ஆடியோ பதிவு
இதையடுத்து 4 கேள்விக்கு பிரதமர் மோடி விடை அளிக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டார். மேலும் ரபேல் தொடர்பான கோப்புகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரின் படுக்கை அறையில் உள்ளதாக ஒரு ஆடியோ பதிவு பகீர் கிளப்பியது.
டுவிட்டரில் கூறிய ராகுல்
இந்நிலையில் எச்ஏஎல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 1000 கோடியை அந்த நிறுவனம் கடன் வாங்கியதாக வந்த செய்தியை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
நிதி இல்லை
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் (எச்ஏஎல்) நிறுவனம் முடங்கி உள்ளது.
ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அந்த நிறுவனத்திடம் நிதி இல்லை.
|
தள்ளப்பட்ட ஊழியர்கள்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டுள்ளது. எச்ஏஎல் நிறுவன பொறியாளர்களை அனில் அம்பானி பணிக்கு எடுத்துள்ளார். ஊதியம் இல்லாததால் எச்ஏஎல் நிறுவனத்தில் இருந்து சிறந்த பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பணிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மலா சீதாராமன் மறுப்பு
இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசுகையில் எச் ஏ எல் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது. எச்ஏஎல்லுக்கு இந்த 4 ஆண்டுகளில் ரூ. 26,570 கோடிக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார்.