அல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன்.. சூட்கேஸில் என்ன வச்சு கொண்டு வர போறாரோ!
அல்வா கிண்டுதல் திருவிழா இன்று நடைபெற்றது
டெல்லி: பட்ஜெட் வரப் போகிறது.. அல்வா கிண்ட ஆரம்பிச்சாச்சு.. அடுத்து பட்ஜெட் அறிவிப்புகளில் என்னவெல்லாம் இருக்கப் போகுதோ.. இதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியாவைப் போல சுவாரஸ்யமான நாடு எதுவுமே இருக்க முடியாது. எல்லாவற்றிலும் ஒரு சம்பிரதாயம் வைத்திருப்பார்கள், சடங்கு இருக்கும், சாஸ்திரம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சம்பிரதாயம்தான் இந்த அல்வா கிண்டுதல்.
அல்வா கொடுத்தால் அது சத்யராஜ்.. அல்வா கிண்டினால் அது பட்ஜெட். இந்த அல்வா கிண்டுதல் நிகழ்ச்சிதான் பட்ஜெட் தயாரிப்புக்கான ஆரம்ப கட்ட வேலைகள் என்று சொல்லலாம். ஆனால் இது எப்படி வந்தது என்பதற்கு பெரிய ஆவணத் தகவல்கள் இல்லை. இருப்பினும் வருடா வருடம் பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பு இந்த அல்வா கிண்டுதல் நடைபெறும்.
ஊழியர்கள்
நிதியமைச்சகம்தான் இதற்கு ஏற்பாடு செய்யும். நார்த் பிளாக்கில் இது நடைபெறும். அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் நிதியமைச்சர், இணை அமைச்சர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், நிதியமைச்சக ஊழியர்கள் என பலரும் கலந்து கொள்வர்.
பட்ஜெட்
அல்வா கிண்டுதல் முடிந்து, அதை சாப்பிட்டு முடித்த பிறகு பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நார்த் பிளாக்கில் உள்ள பேஸ்மேன்ட் அறைக்குப் போய் விடுவார்கள். அங்குதான் பட்ஜெட் அச்சிடும் பணி நடைபெறும். 10 நாட்கள் இவர்கள் இங்கேயேதான் தங்கியிருப்பார்கள். வெளியே வர மாட்டார்கள்.
நிதியமைச்சர்
பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியே கசிந்து விடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. நிதியமைச்சர் மட்டுமே வெளியே வருவார். அவரும் கூட பட்ஜெட் தயாரானதும்தான் வெளியே வருவார்.
நார்த் பிளாக்
1950ம் ஆண்டு வரை ராஷ்டிரபதி பவனில்தான் பட்ஜெட் அச்சிடப்பட்டு வந்தது. ஆனால் அங்கு ஒருமுறை பட்ஜெட் தகவல் கசிந்து பரபரப்பு ஏற்பட்ட பிறகு இந்தப் பணிகள் நிதியமைச்சகம் உள்ள நார்த் பிளாக்குக்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த அல்வா கிண்டுதல் பார்க்க காமெடியாக இருந்தாலும் உண்மையில் பட்ஜெட் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்குப் பாராட்டு விழா போலத்தான் இதுவும் பார்க்கப்படுகிறது.
அல்வா கிண்டினார்
இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதையடுத்து இன்று அல்வா கிண்டும் பணி நடைபெற்றது. இதில் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
சூட்கேஸ்
ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இது அவருக்கு முதல் பட்ஜெட் என்பதாலும், பாஜக 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்திருப்பதாலும் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பார்க்கலாம், அல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன், பட்ஜெட் சூட்கேஸில் என்ன வைத்துக் கொண்டு வந்து தரப் போகிறார் என்பதை.