நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட தூக்கு துரை.. பரபரக்க வைக்கும் வரலாற்று பின்னணி!
டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட தூக்கு துரை பவன் ஜல்லாட்டின் தாத்தாவும், தந்தையும் கூட ஹேங்மேன்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவையே உலுக்கிய சம்பவங்களுள் 2012-ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என மக்கள் காத்திருந்தனர்.
தூக்கிலிடும் பணிக்காக ஆட்கள் தேர்வில் போட்டா போட்டி நிலவியது. இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் சிறைச் சாலையை சேர்ந்த ஹேங்மேன் பவன் ஜல்லாட்டிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
57 வயதாகும் பவன்
மீரட் புறநகர் பகுதியை சேர்ந்தவர் பவன். இவருக்கு 57 வயதாகிறது. உத்தரப்பிரதேசத்தில் சான்று பெற்ற ஹேங்மேன் இவர்தான். இவரை சிறை நிர்வாகம் தேர்வு செய்த நாளன்றிலிருந்து தூக்கிலிடும் நல்வாய்ப்புக்காக தொடர்ந்து காத்திருந்தார். அவரது காத்திருப்புக்கு இன்று காலை பலன் கிடைத்துள்ளது. இதற்காக அவர் நேற்று இரவே திகார் சிறைக்கு வந்துவிட்டார்.
கற்பனை இல்லை
அங்கு தூக்கு ஒத்திகை நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் இன்று காலை 3.30 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றினார். இந்த சம்பவம் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பவன் தெரிவித்துள்ளார். இதற்காக இவருக்கு ரூ 20 ஆயிரம் வீதம் 4 பேருக்கு ரூ 80 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறு வயதிலிருந்து அவர் என்னவாக வேண்டும் என்பது குறித்து கற்பனை செய்து பார்த்தது இல்லையாம்.
தூக்கிலிடும் பணி
ஆயினும் தான் ஒரு ஹேங்மேன் ஆக வேண்டும் என விரும்பினார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவரது தாத்தாவும் தந்தையும் ஹேங்மேன் ஆவார்கள். பவனுக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து தூக்கிலிடுவது என்றால் என்ன தெரியும். இவரது தாத்தா லஷ்மன் மற்றும் தந்தை கல்லு ஆகியோர் ஹேங்மேன்களாக இருந்தவர். இவர்களுக்கு 1989ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட பணி வழங்கப்பட்டது.
பில்லா ரங்காவை தூக்கிலிடும் பணி
இதையடுத்து வடமாநிலங்களையே கலக்கிய ரங்கா பில்லா ஆகியோர் 14 வயது சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணி பவனின் தந்தை கல்லுவுக்கு வழங்கப்பட்டது. இவர்களது வழியில் பவனும் வந்துவிட்டார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் நிதாரி கொலை வழக்கு குற்றவாளியான சுரேந்திர கோலியை தூக்கிலிடும் பணி வழங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தண்டனை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணி வழங்கப்பட்டது. அதை சிறப்பாக செய்து முடித்துவிட்டார். இதில் தந்தை கல்லுவுக்கும் மகன் பவனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் கொடூரமாக பாலியல் குற்றம் செய்தவர்களைத்தான் தூக்கிலிட்டுள்ளனர்.