ஆன்மீக அரசியல்.. ரஜினியெல்லாம் ரொம்ப லேட்டுங்க.. கமல்நாத் அடிச்சாரு பாருங்க அதிரடியா!
டெல்லி: பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வதற்கு இனி மாநில வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி என்றெல்லாம் பேசி பலனில்லை. ஆயுதத்துக்கு ஆயுதம் என்பதைப் போல ஆன்மீகத்துக்கு ஆன்மீகம் என்று கையில் எடுத்தால்தான் பாஜகவை வெல்ல முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களும் முடிவு செய்துவிட்டனர்.
இதன் தொடர்ச்சிதான் மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல் நாத் எடுத்திருக்கும் அஸ்திரம். அயோத்தியில் நாளை ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. பிரதமர் மோடி பூமி பூஜையில் கலந்து கொண்டு, முதல் செங்கல்லை எடுத்துக் கொடுக்கிறார். இது இந்திய வரலாற்றில் பதியப் போகும் அடுத்த வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆயுதங்கள் சப்ளை-ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்- வடகிழக்கில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கிறது சீனா?
காங்கிரஸ் கொள்கை
பொதுவாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இந்து கோயில்களுக்கு செல்வது வழக்கம். இவர்கள் தேர்தல் நேரத்தில் கோயில்களுக்கு செல்வது ஹைலைட் ஆக்கப்படுகிறது. ஆனால், எந்த இடத்திலும் காங்கிரஸ் தன்னை இந்துக் கட்சி என்று கூறிக்கொண்டது இல்லை. மதச்சார்பற்ற கட்சி என்றே கூறி வருகிறது.
பாஜகவின் அஸ்திரம்
ஆனால், பாஜக அப்படியில்லை. தன்னை இந்துக் கட்சி என்று கூறிக் கொள்வதிலும், அதுசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் ஒரு நாளும் மறைத்தது இல்லை. இந்துத்துவத்தை முன்னிறுத்தி வாக்கு வாங்குவதற்கும் தயங்கவில்லை. இதையேதான் ஒவ்வொரு தேர்தலிலும் பின்பற்றி வருகிறது.
டெல்லி தேர்தல்
இதையே தான் கடந்த சட்டசபை தேர்தலிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தார். திடீரென அனுமன் சாலிசாவை படிக்கத் துவங்கினார். இதை வெளிப்படையாகவே செய்தார். சிஏஏவை எதிர்த்து டெல்லியில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்த நிலையிலும், இந்து வாக்குகள் தனக்கு கை கொடுக்கும் என்பதை உணர்ந்தே அவ்வாறு செய்தார் என்றும் கூறப்பட்டது.
வீட்டில் பூஜை
இந்த வரிசைக்குத்தான் தற்போது மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்தும் வந்துள்ளார். அயோத்தியில் நாளை ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று அவரது வீட்டில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதுவும் அனுமன் சாலிசாதான். போபாலில் இருக்கும் தனது வீட்டில் இன்று சிறப்பு பூஜை செய்தார். இதற்கு முன்னதாக தனது ஆதரவாளர்களையும், கட்சியினரையும் அனுமன் சாலிசா வாசிக்குமாறு கேட்டுக் கொண்டு இருந்தார்.
அனுமன் சாலிசா
பூஜை முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல் நாத், ''அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 11 வெள்ளி செங்கற்களை அனுப்பி வைக்க இருக்கிறோம். காங்கிரஸ் தொண்டர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து இந்த செங்கற்களை வாங்கி இருக்கிறோம். நாளை நடக்கும் நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கது. நாடே இதற்காக காத்துக் கொண்டு இருக்கிறது. மத்தியப்பிரதேச மக்கள் நலத்துடன், வளத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அனுமன் சாலிசாவை நான் வாசித்து, பூஜை செய்தேன்'' என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு
மத்தியப் பிரதேச ஆட்சியை கடந்த சட்டசபைத் தேர்தலில் கைப்பற்றி பின்னர் பாஜகவிடம் ஆட்சியை இழந்தார் கமல் நாத். உட்கட்சி பூசலால், ஜோதிராதித்யா சிந்தியா தனக்கு நெருக்கமானவர்களை அழைத்துக் கொண்டு பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. கமல் நாத் முதல்வர் பதவியை இழந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தது. காங்கிரசில் இருந்து 25 எல்.எல்.ஏ.க்கள் வெளியேறினர்.
'கை'கொடுக்குமா
இந்த சூழலில்தான் தற்போது அனுமன் சாலிசா தனக்கும் மத்தியப்பிரதேசத்தில் கைகொடுக்குமா என்று களத்தில் இறங்கியுள்ளார். இவர் ஆன்மீகத்தில் மூழ்கிக் கொண்டு இருக்க மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் வேறு பாதை எடுத்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக் கூடாது என்று அஸ்திரத்தை தூக்கியுள்ளார். ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா புனிதமான நாளில் நடக்கவில்லை. ஆதலால்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட முக்கிய பாஜக தலைவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்கிறார்.
புபேஸ்வர் பாகெல்
பாஜகவுக்கு போட்டியாக, சத்தீஸ்கரில் ராமரின் தாய் கவுசல்யாவுக்கு பெரிய அளவில் கோயில் கட்டப்படும் என்று அந்த மாநில முதல்வர் புபேஸ்வர் பாகெல் தெரிவித்து இருந்தார். அப்படியாவது பாஜகவை முந்திச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். சத்தீஸ்கரில் தனது ஆட்சியும் இனி எத்தனை நாட்களோ என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார். அங்கேயும் ஆபரேஷன் கமலாவை கையில் எடுத்து விட்டனர் பாஜகவினர். இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பையும் செய்து இருந்தார்.