ராஜ்யசபா துணை தலைவராக இங்கு நான் வரவில்லை.. போராடிய எம்பிக்களிடம் ஹரிவன்ஷ் பேசியது என்ன?
டெல்லி: சக எம்பியாக உங்களை சந்திக்க வந்தேன்.. ராஜ்யசபா துணை தலைவராக அல்ல என்று எங்களிடம் தெரிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 8 எம்பிக்களில் ஒருவரான காங்கிரஸ் எம்பி ரிருன் போரா தெரிவித்தார்.
வேளாண் மசோதா தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங் எம்பி டெரக் ஓ பிரைன், டோலா சென், இளமாறம், கதீரம், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதவ், நசீர் ஹூசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் எம்பி கேகே ராகேஷ் ஆகிய 8 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்த ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நள்ளிரவு தாண்டி போராடிய எம்பிக்கள், இந்த இடத்தை விட்டு செல்ல மறுத்துவிட்டனர். விடிய விடிய காந்தி சிலை முன்பு தங்கி போராடினார்.
அவர்களை காலையில் ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் உடன் வந்து சந்தித்தார். அவரே தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ்களை வழங்கினார். இந்த சந்திப்பு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்பிக்களில் ஒருவரான காங்கிரஸ் எம்பி ரிபுன் போரா கூறுகையில், ஹரிவன்ஷ் ஜி எங்களை ஒரு சக ஊழியராக (எம்பியாக) சந்திக்க வந்ததாகவும், ராஜ்யசபா துணைத் தலைவராக தான் இங்கு வரவில்லை என்றும் கூறினார். அவர் எங்களுக்காக தேநீர் மற்றும் சிற்றுண்டிகளையும் கொண்டு வந்தார்.
விடிய விடிய போராடும் எம்பிக்கள்.. டீ கொண்டு வந்த ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ்.. ட்விஸ்ட்
எங்கள் இடைநீக்கத்திற்கு எதிரான போராட்டமாக இந்த உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தை நேற்று தொடங்கினோம். நாங்கள் இரவு முழுவதும் இங்கு இருந்தோம்: எங்களைப் பற்றி விசாரிக்க அரசாங்கத்திலிருந்து யாரும் வரவில்லை. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்களைப் பற்றி விசாரிக்கவும் எங்களுடன் ஒற்றுமையைக் காட்டவும் வந்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் தொடரப் போகிறோம்" என்றார்.