மக்களே டோன்ட் வொரி...தடுப்பூசி ஒரு சஞ்சீவனியாக செயல்படும்... நம்பிக்கை கொடுக்கும் ஹர்ஷ் வர்தன்!
டெல்லி: கொரோனா தடுப்பூசி ஒரு 'சஞ்சீவனியாக' செயல்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
Recommended Video
இரண்டு தடுப்பூசிகளும் மிகவும் பாதுகாப்பானவை, பயனுள்ளவை, மக்கள் வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
தடுப்பூசி போடும் பணி
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு, அது தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வீரம் நிறைந்த போராட்டம்
பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:- இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். கொரோனா வைரஸுக்கு எதிரான நமது போராட்டத்தின் மூலம் தடுப்பூசி கொண்டு வந்து பிரதமரால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டோம். இது உலகின் மிகப்பெரிய கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம். கடந்த ஒரு வருடத்தில் இந்த நோய்க்கு எதிராக ஒரு வீரம் நிறைந்த போராட்டத்தை நம்மால் மேற்கொள்ள முடிந்தது. இது மிகச் சிறந்த செயல்திறனை ஏற்படுத்தியுள்ளது. உலகில் மிகக் குறைந்த கொரோனா இறப்பு விகிதம் நம்மிடம்தான் உள்ளது.
சஞ்சீவனியாக செயல்படும்
கொரோனா தடுப்பூசி ஒரு 'சஞ்சீவனியாக' செயல்படும். கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளின் பரிசோதனை முடிவை பார்த்தபின்புதான் மருத்துவ வல்லுநர்கள் இதற்கு ஒப்புதல் அளித்தனர். இந்த தடுப்பூசிகளுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை. மக்கள் தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். அதற்கு பதிலாக வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளை மக்கள் நம்ப வேண்டும்.
அனைவருக்கும் நன்றி
இது உலகில் எங்கும் இல்லாத வகையில் கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய நோய்த்தடுப்பு பிரச்சாரம். இதுபோன்ற பிரச்சினைகளை கையாள்வதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அனுபவம் உள்ளது. நாம் ஏற்கனவே போலியோ மற்றும் பெரியம்மை நோயை ஒழித்துவிட்டோம். இந்த நாளில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.
ஊடகங்கள் சரியாக செயல்படுகின்றன
வதந்திகள் பரப்பப்படும் சமயங்களில், ஊடகங்கள் சரியான தகவல்களை பரப்புகின்றன, இந்த நடவடிக்கை நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு மிகவும் உதவும். பாரத் பயோடெக்கின் கோவாக்சினின் 3 ஆம் கட்ட சோதனைகள் நடந்து வருகிறது. இந்த தடுப்பூசி போதுமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.