இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள்.. மத்திய அமைச்சரின் ஹேப்பி தகவல்
டெல்லி: இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
கொரோனா பரவி ஓராண்டு நிறைவுற்ற பிறகும் அங்கும் இங்கும் பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திவிட்டது.
இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அந்த வகையில் இந்தியாவிலும் இரு தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் சீரம் நிறுவனமும் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து தயாரித்த கோவாக்சினும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த இரு தடுப்பூசிகளையும் வெளிநாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வருகிறது. இந்த வகையில் மேலும் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில், அண்மையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகளை மட்டுமே இந்தியா சார்ந்து இருக்கப் போவது இல்லை.
நமது நாட்டிலேயே மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வகை செய்யும் அளவில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
திறந்த சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வரும் போது அதன் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது. 50-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் என்றார்.