50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் 2 வாரத்தில் தடுப்பூசி... ஹர்ஷ்வர்தன் குட் நியூஸ்!
டெல்லி: 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் 2 வாரங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
அடுத்த கட்டமாக 26 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமா? என்பது குறித்த முக்கியமான முடிவு விவாதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
நிதியமைச்சர் தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார். தேவைப்பட்டால் அரசு இந்த நிதியை மேலும் அதிகரிக்க கருத்தில் கொள்ளலாம் என்று ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
கொரோனா கட்டுக்குள் வந்தது
உலகம் முழுவதும் ஒரு வருடத்தை கடந்த பின்பும் கொரோனா இன்னும் ஆட்டம் காட்டி வருகிறது. கொரோனாவின் கொட்டத்தை அடக்க முடியாமல் பல்வேறு நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவில் முன்பை விட ஓரளவுக்கு கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் பாதிப்பு அதிமாக உள்ளது.
தடுப்பூசி போடுவதில் தயக்கம்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தியாவில் கோவோக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதற்கட்டமாக மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் தடுப்பூசி பெறுவதில் அனைவரிடமும் ஒருவித தயக்கம் நிலவி வருகிறது.
50 வயது மேற்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி
தடுப்பூசி ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்ற கருத்து மக்களிடையே நிலவுவதால் பல்வேறு மருத்துவர்கள் கூட தடுப்பூசி போட முன்வரவில்லை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான தடுப்பூசிகள் வீணாகின. இந்த நிலையில் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் 2 வாரங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
தடுப்பூசி இலவசமா?
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். அடுத்த கட்டமாக 26 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமா? என்பது குறித்த முக்கியமான முடிவு விவாதிக்கப்படுகிறது.
நிதி அதிகரிக்கப்படும்
இது தொடர்பாக மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும். நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில், தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார். தேவைப்பட்டால் அரசு இந்த நிதியை மேலும் அதிகரிக்க கருத்தில் கொள்ளலாம் என்று ஹர்ஷ்வர்தன் கூறினார்.