விவசாயிகளை ஒட்டுண்ணி என்று பிரதமர் விமர்சிக்கலாமா? மாஜி மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ஆவேசம்
டெல்லி: தேசத்தின் விவசாயிகளை ஒட்டுண்ணி என்று பிரதமர் மோடி விமர்சிக்கலாமா? என லோக்சபாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகாலி தளத்தின் சார்பில் பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஹர்சிம்ரத் கவுர் பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபாவில் செவ்வாய்க்கிழமையன்று டெல்லி விவசாயிகளின் போராட்ட படங்களை எடுத்துக் காட்டி ஹர்சிம்ரத் கவுர் பேசியதாவது:
டெல்லி எல்லைகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருக்கிறது. அரசியல் சாசன நாளில் நிராயுதபாணிகளான விவசாயிகள் மீது லத்திகளை கொண்டு தாக்கியது மத்திய அரசு. கண்ணீர்புகை குண்டுகளை வீசியது மத்திய அரசு.
விவசாயிகள் யாரும் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் டெல்லியில் போராடவில்லை. பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்த விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச விலையை உறுதி செய்வதில் துணை நின்றார். இப்போது 360 டிகிரி தலைகீழ் மாற்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் பிரதமர் மோடி அவரது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் அல்லது ஜனாதிபதி மாளிகையில் இருந்து இதுவரை விவசாயிகள் போராட்டம் பற்றி எதுவுமே பேசவில்லையே..
விவசாயிகளை ஒட்டுண்ணிகள் என அழைக்கிறார் பிரதமர் மோடி. அந்த விவசாயிகள்தான் உங்கள் மேஜைகளில் உணவுப் பொருட்களை கொண்டுவந்து வைக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நாட்டில் யாரேனும் உண்மையை எழுதினால் அவர்களை சிறையில் அடைக்கின்ற கொடுமை நடக்கிறது. இவ்வாறு ஹர்சிம்ரத் கவுர் பேசினார்.