விவசாயிகள் போராட்டம்... ஹரியானா பாஜக அரசுக்கு ஆபத்து? பிரதமரை சந்திக்கும் ஹரியானா துணை முதல்வர்
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஹரியானாவின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
மூன்று புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு சுமார் ஆறு வாரங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், மூன்று சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும், இது குறித்து முடிவு செய்ய கமிட்டி ஒன்றை அமைத்த உச்ச நீதிமன்றம், தலைநகரில் போராடும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது. இருப்பினும், விவசாய சட்டங்கள் முழுவதுமாக திரும்பப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடும் திட்டமோ அல்லது வெறு இடத்திற்கு மாற்றும் திட்டமோ இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.
மோடியுடன் சந்திப்பு
இந்தப் போராட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகளுடன் இணைந்து ஹரியானா மாநில விவசாயிகளும் அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஹரியானாவின் துணை முதல்வரும் ஜன்னாயக் ஜனதா கட்சித் தலைவருமான துஷ்யந்த் சவுதாலா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். விவசாய சட்டங்கள் தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.
அமித் ஷாவுடன் சந்திப்பு
முன்னதாக துஷ்யந்த் சவுதாலா நேற்று உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, முதலமைச்சர் மனோகர் லால் கட்டருடம் உடன் இருந்தார். இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் ஹரியானாவில் உச்சத்தை எட்டியுள்ளது. இது குறித்து உள் துறை அமைச்சருடன் விவாதித்தேன்" என்றார்.
எம்எல்ஏகளுக்கு அதிகரிக்கும் அழுத்தம்
டெல்லி புறப்படுவதற்கு முன் துஷ்யந்த் சவுதாலா, தனது எம்எல்ஏகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது விவசாய சட்டங்கள் திரும்பப் பெறவில்லை என்றால் அது அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அரசு கவிழும் அபாயமும் ஏற்படும் என்றும் ஒரு தரப்பு எம்எல்ஏகள் கூறினர். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேளவிக்கு பதிலளித்த துஷ்யந்த், "எங்கள் அரசுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. நாங்கள் முழுவதுமாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வோம்" என்றார்.