அமித்ஷா உடன் தீவிர ஆலோசனை.. போராட்டத்தை தடுக்க புதிய சட்டம்? ஹரியானா முதல்வர் அதிரடி
டெல்லி: பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பவர்களிடம் இருந்தே அதற்கான பணத்தை வசூலிக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போராட்டங்களைத் தடுக்க அம்மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா உடன் நேரில் சந்தித்து, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டங்களின்போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பவர்களிடம் இருந்தே அதற்கான பணத்தை வசூலிக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.
ஹரியானா முதல்வரின் இந்தக் கருத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளின்போது ஏற்படும் சேதங்களுக்கு யார் பொறுப்பு என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், விவசாய சட்டங்களுக்கு எதிராகச் சிலர் தேவையின்றி போராட்டம் நடத்துவதாகவும் அது அவர்களின் அரசியல் நோக்கங்களைப் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலமே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று தெரிவித்த அவர் ஒவ்வொரு சட்டப்பிரிவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளதாக அவர் உறுதியளித்தார்.