டெல்லி அருகே பயங்கரம்.. காங். செய்தி தொடர்பாளர் சுட்டுக் கொலை.. சிசிடிவியில் பதிவான திக் திக் காட்சி
டெல்லி: ஹரியானா காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி இன்று காலை டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
38 வயதான அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஜிம் ஒன்றின், வாகன நிறுத்துமிடத்தில் தனது காரில் ஏற முற்பட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.
ஹரியானா காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்த விகாஸ் சவுத்ரி, சமீபத்தில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியை (ஐ.என்.எல்.டி) விட்டு வெளியேறி காங்கிரசில் இணைந்தவர். ஹரியானா காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது.
பேரழிவு ஏற்படும்.. தமிழகத்தை சகாரா பாலைவனமாக்க திட்டமிடுகிறதா மத்திய அரசு.. ஸ்டாலின் ஆவேசம்
|
சிசிடிவி காட்சிகள்
இந்த நிலையில்தான், இன்று காலை, விகாஸ் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜிம் அருகே, சாலையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் இரண்டு ஆண்கள் கார் வரை நடந்து சென்று சுடுவது பதிவாகியுள்ளது. இருவருமே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 10 குண்டுகள் அப்போது சீறிப் பாய்ந்தன.
இதன்பிறகு, அதில் ஒருவர் அமைதியாக நடந்து சென்று, கார் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு திரும்பி சென்றுள்ளார்.
தப்பியோடினர்
சாலையில் மக்கள் நெருக்கம் இருந்தபோதும், கொலையாளிகள் தப்பியோடிவிட்டனர். விகாஸ் சவுத்ரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். இந்த கொலையில், மொத்தம், நான்கு பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மாருதி சுசுகி எஸ்எக்ஸ் 4 வகை காரில் வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கிறார்கள். ஹரியானாவில் மனோகர் லால் கட்டர் தலைமையில் பாஜக அரசு நடந்து வருகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளதாக, காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஜங்கிள் ராஜ்ஜியம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில்: "ஃபரிதாபாத்தில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கொலை செய்யப்பட்டுள்ளது, கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது மற்றும் சோகமானது. இது ஹரியானாவில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கின் பிரதிபலிப்பாகும்." இவ்வாறு கூறியுள்ளார். "இது 'ஜங்கிள் ராஜ்', சட்டத்திற்கு மதிப்பு இல்லை. நேற்றும் இதேபோன்ற சம்பவம் நடந்தது, பாலியல் வன்கொடுமையை எதிர்த்த ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டார்" என்று ஹரியானா காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கோபம்
"காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினருக்கு எதிரான இந்த கொடூரமான வன்முறைச் செயலால் நாங்கள் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைகிறோம். குற்றவாளிகளை விரைவாக நீதிக்கு முன்பாக கொண்டு சென்று நிறுத்துமாறு ஹரியானா அரசை, நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்," என்று காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது.