ஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக
டெல்லி: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் இம்முறையும் பாஜக எளிதாக வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கள சூழல்கள் தெரிவிக்கின்றன. அத்தனை எதிர்க்கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து பயணிப்பதால் பாஜகவுக்கு களம் சாதகமாக இருக்கிறது.
90 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இம்மாநிலத்திலும் அக்டோபர் 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2014-ல் மோடி அலையால் ஹரியானாவில் முதல் முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அத்தேர்தலில் பாஜக 47; இந்திய தேசிய லோக் தளம் 19; காங்கிரஸ் 15; ஹெச்.ஜே.சி.-2; சுயேட்சைகள்- 5; பகுஜன் சமாஜ்- 1 இடங்களைப் பெற்றன.
மகாராஷ்டிரா தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற பாஜக படுதீவிரம்... கை கொடுக்குமா கட்சி தாவல்கள்?
ஜாட் அல்லாத முதல் முதல்வர்
சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக பஞ்சாபியான மனோகர் லால் கட்டாரை முதல்வராக்கியது. ஹரியானாவில் 18 ஆண்டுகளாக ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதல்வராக பதவி வகித்து வந்தனர். பஜன்லால், பன்சிலால், ஓம்பிரகாஷ் செளதாலா, பூபிந்தர் சிங் ஹூடா என ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் இருந்தனர்.
ஹரியானா நிலவரம் இது
இதனை உடைத்தது பாஜக. இதனால் ஹரியானாவில் ஜாட் மற்றும் இதர சமூகத்தினரிடையேயான பிளவுகள் கூர்மையாகின. ஹரியானாவைப் பொறுத்தவரை இந்து- முஸ்லிம்கள் என்கிற பிரிவினை அல்ல. ஜாட் மற்றும் இதர சமூகத்தினர் என்பதாக களநிலைமை இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் சிதறல்
ஜாட்கள் மற்றும் தலித்துகளின் வாக்குகள் மொத்தம் 47% இருக்கின்றன. இதனை எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து அறுவடை செய்ய முடியும். ஆனால் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம், பகுஜன் சமாஜ், ஜேஜேபி ஆகியவை இடையே ஒற்றுமை இல்லை என்பதுதான் இங்கு பிரதான அம்சம்.
ஆட்சியை தக்க வைக்கும் பாஜக
பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்திய தேசிய லோக் தள் உடைந்து ஜேஜேபி உதயமானது. இதனால் இவை தீர்மானிக்கும் சக்திகள் என்கிற அந்தஸ்தை இழந்துவிட்டது, இப்படி எதிர்க்கட்சிகள் ஆளுக்கு ஒரு திசையில் பயணிப்பதால்தான் பாஜக மீண்டும் ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் என்கிற பெருநம்பிக்கையில் இருக்கிறது.