ஆம் ஆத்மிக்கு அவுட்சோர்ஸிங் வேலை பார்த்தோமா?.. பேசாம கடையை மூடிடலாமே!. ப.சி.க்கு பிரணாப் மகள் கேள்வி
Recommended Video
டெல்லி: ஆம் ஆத்மி வெற்றியை நாம் கொண்டாடுவதற்கு நாம் என்ன அவர்களுக்கு வேலை பார்த்தோமா என டெல்லி காங்கிரஸ் மகளிரணி தலைவியும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளுமான ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் கடந்த 8 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதை ஆம் ஆத்மி கட்சியை காட்டிலும் பாஜக கொண்டாடி வருகிறது.
பாஜகவின் தோல்வி
இந்த தேர்தலில் ஆம் ஆத்மிதான் வெற்றி பெறும் என்பது தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சாக்கோ கூறியிருந்தார். இந்த நிலையில் ப சிதம்பரம், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோர் தங்கள் கட்சியின் தோல்வியை காட்டிலும் ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் பாஜகவின் தோல்வி.
சித்தாந்தம்
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஏமாற்று பேச்சுகள் தோல்வி அடைந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தை கொண்ட பாஜக தோற்கடித்துள்ளனர்.
சிதம்பரம் ட்வீட்
2021, 2022 ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த 2015-ஐ போல் இந்த முறையும் டெல்லியில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில் சிதம்பரத்தின் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுட்சோர்ஸிங்
ப சிதம்பரத்தின் ட்வீட்டுக்கு டெல்லி காங்கிரஸ் மகளிரணி தலைவி ஷர்மிஸ்தா முகர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் ப சிதம்பரம் சார் உரிய மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். சும்மா தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். பாஜகவை தோற்கடித்த மாநில கட்சிகளுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் அவுட்சோர்ஸிங் வேலை ஏதாச்சும் பார்த்ததா?
|
கடையை மூடிவிடலாம்
அப்படி ஏதும் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து கவலைப்படாமல் ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடுவது ஏன்? அப்படி அவுட்சோர்ஸிங் வேலை பார்த்திருந்தால் நாம் எல்லாம் கடையை மூடிவிட்டு செல்ல வேண்டியதுதான்! பாஜக பிரித்தாளும் அரசியலை செய்தது. ஆனால் கெஜ்ரிவால் அழகான அரசியல் செய்தார். ஆனால் நாம் என்ன செய்தோம்? காங்கிரஸை கைப்பற்றுவதில் நாம் போட்டி போடுகிறோம். ஆனால் மற்ற கட்சிகள் இந்தியாவை ஆள்வதற்கு போட்டியிடுகின்றன என காங்கிரஸில் அதிகார போட்டி குறித்து முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.