ஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட மலையாள பத்திரிக்கையாளர்.. உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு
டெல்லி: ஹத்ராஸ் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று, கேரள யூனியன் ஆஃப் ஒர்க் ஜர்னலிஸ்ட்ஸ் (கே.யு.டபிள்யூ.ஜே) உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கைது நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.
மலப்புரத்தைச் சேர்ந்த சித்திக் கப்பன், பஹ்ரைச்சின் மசூத் அஹ்மத், முசாபர்நகரைச் சேர்ந்த அதிக்-உர்-ரஹ்மான் மற்றும் ராம்பூரைச் சேர்ந்த முகமது ஆலம் என நான்கு பேரை ஹத்ராஸ் செல்லும் வழியில், மதுரா அருகே, உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
நான்கு பேர் கைது
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஹத்ராஸ் பலாத்காரம், கொலை சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகளில் இன, வன்முறையைத் தூண்ட முயன்றனர். இவர்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, உறுப்பினர்கள் என்று உத்தரபிரதேச காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
செல்போன் பறிமுதல்
மதுரா ஊரக போலீஸ் கண்காணிப்பாளர் ஷிரிஷ் சந்திரா கூறுகையில், "நாங்கள் அவர்களின் மொபைல்கள் மற்றும் லேப்டாப்புகளை கைப்பற்றியுள்ளோம். அவர்களிடமிருந்து சில சந்தேகத்திற்குரிய புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளோம். ஆனால் அவர்களில் ஒருவர் பத்திரிகையாளர் என்பதையும் பிறகு தெரிந்து கொண்டோம். இந்த நான்கு பேர் மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 151 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம்
இதனிடையே, முன்னதாக, கே.யு.டபிள்யூ.ஜே தலைவர் மிஜி ஜோஸ் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில், கைது செய்யப்பட்ட கப்பன் தங்கள் சங்கத்தின் டெல்லி பிரிவு செயலாளராக இருந்தார் என்றும் கப்பன் பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்து. தற்போது அவர் ஒரு வெப்சைட்டில் பணியாற்றுகிறார். பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக செய்தி சேகரிக்க கப்பன், ஹத்ராஸுக்கு சென்று கொண்டிருந்தார். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்கொணர்வு மனு
உச்சநீதிமன்றத்தில் கே.யு.டபிள்யூ.ஜே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை மீறி கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. பத்திரிகையாளர் கடமையை நிறைவேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விஷயமும், கப்பனின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.