ஹத்ராஸ் கொடுமை.. பெண் நிருபரின் போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டதா உ.பி. அரசு? லீக் செய்யப்பட்ட ஆடியோ
டெல்லி: ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் செய்தி சேகரிக்கும் நிருபர்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா டுடே செய்திச் சேனலின் பெண் செய்தியாளர் போன் உரையாடல் லீக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் பெண்ணின் உடலை அவரின் பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையே அதிகாலை 2.30 மணிக்கு ஊருக்கு வெளியே வைத்து தகனம் செய்தது.
உடல் எங்கோ பத்திரமாக உள்ளது.. வேறு உடலை எரித்துள்ளார்கள்.. ஹத்ராஸ் பெண் குடும்பம் பரபர குற்றச்சாட்டு
|
துருவி துருவி கேட்ட பெண் நிருபர்
அப்போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற இந்தியாடுடே ஊடகத்தின் பெண் நிருபர் தனுஸ்ரீ பாண்டே, புகை வருவதை பார்த்து சந்தேகமடைந்து அங்கிருந்த காவல்துறையினரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அங்கே என்ன நடக்கிறது.. எரிக்கப்படுவது என்ன என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. எதுவாக இருந்தாலும் மாவட்ட கலெக்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நான் பாதுகாப்பு கொடுக்க வந்துள்ளேன். அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாது என்று திரும்பத் திரும்ப இன்ஸ்பெக்டர் கூறியபடியே இருந்தார்.
வெளிச்சம் போட்ட தனுஸ்ரீ பாண்டே
இதன்பிறகுதான், தலித் பெண் உடல் எரிக்கப்பட்டது.. பெண்ணின் உறவினர்கள் உடலை எரிக்க கூடாது, தங்களிடம் தரவேண்டும் என்று கூறி காவல் துறையினரிடம் கெஞ்சியது உள்ளிட்ட அனைத்து விவரங்களும், குறிப்பிட்ட அந்தப் பெண் நிருபரின் தொடர் முயற்சிகளால், உலகுக்கு தெரிய வந்தன. இதன் பிறகுதான் உத்தரபிரதேச மாநில அரசு அவசர கதியில் அந்த உடலை எரித்து ஏன் என்ற கேள்வி துளைக்க ஆரம்பித்து, நாடு முழுக்க கொந்தளிப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் குறிப்பிட்ட அந்த பெண் பத்திரிக்கையாளரை தொலைபேசி உத்தரபிரதேச மாநில அரசின் உத்தரவின் பேரில் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பதில் இல்லை
வலதுசாரி இயக்கத்துக்கு ஆதரவான ஒரு வெப்சைட்டில் குறிப்பிட்ட அந்த பெண் பத்திரிக்கையாளர்- உயிரிழந்த பெண்ணின் சகோதரருடன் உரையாடும் ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியாவிடம், இதுபற்றி இந்தியா டுடே கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், உங்களது பெண் பத்திரிகையாளர், எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் சகோதரருக்கு டியூசன் நடத்துகிறார். செய்திகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று குற்றஞ்சாட்டினார். ஆனால் இந்தியா டுடே நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
யார் அனுமதி கொடுத்தது?
பெண் நிருபரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவரும் உரையாடும் ஆடியோ உங்களுக்கு எப்படி கிடைத்தது? இவ்வாறு நிருபர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் உரிமையை எந்த சட்டத்தின் கீழ் நீங்கள் எடுத்தீர்கள். ஒருவேளை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருந்தாலும் அது பெரிய குற்றம் ஆயிற்றே. இதற்கு உங்களின் பதில் என்ன என்று கேட்டதற்கு மால்வியா பதிலளிக்கவில்லை.
|
ஊடக குழுமம் ஆதரவு
இதற்கிடையே, இந்தியா டுடே ஊடக குழுமம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தங்கள் நிருபர் தனுஸ்ரீ பாண்டேவுக்கு ஆதரவாக இருப்போம் என்று தெளிவுபடுத்தி உள்ளது. நிருபரின் தொலைபேசி உரையாடல் அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதா என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும். எதற்காக பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்ற விளக்கத்தை அரசு வழங்க வேண்டும்.
தவறு இல்லை
சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளியே சொல்ல வேண்டும். பத்திரிகையாளர்களை ஊருக்கு உள்ளேயே செல்ல அனுமதிக்காத நிலையில் பெண்ணின் சகோதரரிடம் அங்கு நடப்பதை வீடியோ எடுத்து அனுப்ப எங்கள் நிருபர் கேட்டதில், எந்த தவறும் கிடையாது. எங்கள் நிருபர்களுக்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.