நரி சிரிச்சிடுச்சிடோய்.. அப்போ கொரோனா எல்லாம் இனி காணாமப் போய்டும்.. இதென்னடா புதுக்கதையா இருக்கு!
இரண்டு நரிகள் சிரிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
டெல்லி: இரண்டு குள்ள நரிகள் வாய்விட்டு சிரிக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நரிக்கும் நம்மூர் மக்களுக்கும் ஏகப்பட்ட தொடர்பு உண்டு. குழந்தைகளுக்கு நாம் சொல்லும் முதல் கதையே, காக்கா - நரி - பாட்டி வடை சுட்டக்கதை தான். அதேபோல் நரியும் கொக்கும், பெயிண்ட் டப்பாவுக்குள் விழுந்த நரி உள்பட நரியையும், அதன் தந்திரத்தையும் மையப்படுத்திய கதைகள் தான் நம் குழந்தை பருவத்தை ஆட்கொண்டிருந்தன.
நரியை மையப்படுத்தி இங்கு ஏராளமான நம்பிக்கைகளும் உலா வருகின்றன. நரி முகத்தில் விழித்தால் அன்றைய பொழுது சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. இதை நம்பி நரி போல் இருக்கும் செந்தில் முகத்தில் விழித்துவிட்டு, வடக்குப்பட்டி ராமசாமியிடம் பணம் வசூலிக்கச் சென்ற கவுண்டமணியின் நிலை என்ன ஆனது என்பது ஊர் அறிந்த விஷயம்.
பொதுவாக நரி கத்துவதை ஊளையிடுவது என தமிழில் குறிப்பிடுவோம். நரி ஊளையிடுவதை மலையடிவார கிராமங்களில் எளிதாக கேட்க முடியும். ஆனால் தந்திரத்திற்கு மட்டுமே பேர் போன நரிக்கு சிரிக்கவும் தெரியும். நரி சிரிப்பதை பார்ப்பது மிகவும் அரிதானது. அப்படிப்பட்ட அரிய புகைப்படங்கள் சில சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.
எல்லையில் பதற்றம்: லடாக்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை ஆய்வு
அந்த புகைப்படங்களில் இரண்டு நரிகள் குப்புறப் படுத்துகிடக்கின்றன. அதன் வயிற்றில் யாரோ ஒருவர் கிச்சிக்கிச்சு மூட்டுகிறார். இதனால் குஷியடைந்த அந்த நரிகள் கெக்கபொக்கே என சிரிக்கின்றன. அதன் வாயின் வடிவம் சிரிக்கும் முகபாவனையை அப்படியே பிரதிபலிக்கின்றன.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், 'சூப்பர் நரி சிரிச்சிடுச்சு... இனி நல்லகாலம் பொறந்திடும். கொரோனா எல்லாம் காணாமல் போய்விடும்', என கவுண்டமணி ரேஞ்சுக்கு கனவுகாண தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு வடக்குப்பட்டி ராமசாமியை நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.