இங்கிலாந்தில் பரவும் புதுவகை கொரோனா.. இந்தியாவில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன? அவசர ஆலோசனை
டெல்லி: இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்வதற்காக இந்தியாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா கண்காணிப்பு குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தன்னை பல்வேறு வகைகளில் உரு மாற்றிக்கொண்டு பரவி வருகிறது. ஒரு பக்கம் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணிகள் துவங்க உள்ள நிலையில், புதிய வகை வைரஸ் காரணமாக நோய்த் தொற்று வேகமாக பரவுகிறது என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டன் நாட்டில் இருந்து விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.
இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில்தான் கொரோனா நோய் பரவல் கண்காணிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அழைப்பு விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் துறை ஜெனரல் டைரக்டர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி சில மணி நேரங்கள் நடந்தது.
பிரிட்டன் விமானங்கள்
பிரிட்டனில் இருந்து தங்கள் நாட்டுக்கு விமான சேவைகள் இயக்கப்படுவதற்கு நெதர்லாந்து தடைவிதித்துள்ளது. பெல்ஜியம் இதே நடைமுறையை பின்பற்ற போவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜெர்மனியும் தடை விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் மற்றொரு வகையான வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து வரும் விமானங்களுக்கும் தடை விதிக்க உள்ளதாகவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது.
இத்தாலி, ஆஸ்திரியா
இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர், ஃபேஸ்புக்கில் இது பற்றி எழுதும் போது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். எந்த மாதிரி நடவடிக்கை என்பதை கூறவில்லை. ஆஸ்திரியா நாட்டு சுகாதார துறை அமைச்சகமும் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லாக்டவுனில் கடுமை?
இவ்வாறு ஐரோப்பிய நாடுகளே பிரிட்டனை தனிமைப்படுத்தி வருவதால், பிரிட்டனிலிருந்து எந்தவிதமான போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் இங்கிலாந்துக்கு விமான சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பழைய மாதிரி லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. பழைய கெடுபிடிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்தியா நிலைப்பாடு
கிறிஸ்மஸ் காலம் என்ற போதிலும் கூட கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க தேவையுள்ளதா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது அதுபோன்ற நடவடிக்கை தேவையில்லை என்று முடிவு செய்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழு லாக்டவுனாக இல்லாவிட்டாலும், ஒருவேளை இங்கிலாந்தில் தென்பட்டது போன்ற கொரோனா வைரஸ் தென்பட்டால், கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 337 கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன .இது நேற்றைய எண்ணிக்கையைவிட 8.5 சதவீதம் குறைவு ஆகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களில் பயணிகளிடம், விமான நிலையத்தில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்படும். கொரோனா பாசிட்டிவ் தெரியவந்தால், அவர்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வைக்கப்படுவார்கள்.