டெல்லியில் திடீரென மூண்ட வன்முறை... போலீசார் -விவசாயிகள் காயம்... தலைநகர் போர்க்களமானது எப்படி?
டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணியில் போலீசார், விவசாயிகள் இடையே கடும் மோதல் மூண்டது.
சில விவசாயிகள் தடுப்புகளை அகற்றி போலீசார் மீது வீசினார்கள். போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தினார்கள்.
குடியரசு தினம் அன்று அமைதியாக இருக்க வேண்டிய தலைநகர் போர்க்களம் ஆனது.
தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்து வருகிறது.
டிராக்டர் பேரணி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களுடன் பிரமாண்ட பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் ஏற்கனவே தெரிவித்த்தனர். அதன்படி திட்டமிட்டபடி பேரணி இன்று தொடங்கியது. ஆனால், சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் தடியடி
இதன் காரணமாக விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். சில விவசாயிகள் தடுப்புகளை அகற்றி போலீசார் மீது வீசினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தினார்கள்.
அடித்து நொறுக்கப்பட்டன
வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் கைகளில் வாளுடன் தடுப்புகளை அகற்றி முன்னேறினார்கள். சிலர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். 7 பஸ்கள் மற்றும் சில போலீஸ் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. விவசாயிகளுடன் ஏற்பட்ட மோதலில் பல போலீசார் படுகாயம் அடைந்தனர். இதேபோல் ஏராளமான விவசாயிகளுக்கும் காயம் ஏற்பட்டது. டெல்லி, நாங்லோய் சந்திப்பில் விவசாயிகள் சிலர் டிராக்டர் பாதைகளை மாற்றினர். மத்திய டெல்லியை நோக்கி டிராக்டர்களில் செல்ல முயன்றதால் தடுத்து நிறுத்தினோம் என்று டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மொத்தத்தில் குடியரசு தினம் அன்று அமைதியாக இருக்க வேண்டிய தலைநகர் போர்க்களம் ஆனது.